மாருதிக்கு எங்கேயோ மச்சம் இருக்கு... விற்பனையில் அப்படியொரு திடீர் எழுச்சி!
கொரோனாவால் பல கார் நிறுவனங்கள் வர்த்தகத்தில் தடுமாறி வரும் நிலையில், மாருதி கார் நிறுவனத்தின் விற்பனை அமோக வளர்ச்சி கண்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே விற்பனையில் சுணக்கமான நிலையை சந்தித்து வந்தது. போதாக்குறைக்கு கொரோனா வந்து சேர்ந்து கொண்டதால், கடந்த சில மாதங்களாக மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மாருதி கார் நிறுவனத்தின் விற்பனை சீரான வளர்ச்சியை பதிவு செய்து வந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது.

கடந்த மாதத்தில் 1,47,912 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பரில் 1,10,454 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதத்தில் 33 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

மேலும், கடந்த மாதம் 7,834 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 9 சதவீத வளர்ச்சியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி விற்பனை உயர்வு மாருதிக்கு பெரிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது.

மாருதி நிறுவனம் பெரும்பாலும் சிறிய வகை கார்களையே அதிகம் வைத்துள்ளது. கொரோனா காரணமாக, பொது போக்குவரத்தில் செல்வதற்கு அச்சப்பட்டு தனிநபர் பயன்பாட்டு வாகனங்களை வாங்கும் மனநிலைக்கு வந்துள்ளனர். மாருதி சியாஸ் கார் உள்ளடக்கிய மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் மாருதிக்கு பின்னடைவை சந்தித்தாலும், சிறிய வகை கார்கள் மூலமாக வலுவான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது.

மாருதி ஆல்ட்டோ மற்றும் எஸ் பிரெஸ்ஸா ஆகிய இரண்டு கார்கள் மூலமாக 27,246 யூனிட்டுகள் என்ற விற்பனையை பதிவு செய்துள்ளது. இது 35.7 சதவீத உயர்வு. வேகன் ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர், டூர் எஸ் ஆகிய கார்கள் அடங்கிய மார்க்கெட்டில் 84,213 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது மாருதி. இது 47.3 சதவீத வளர்ச்சியாக பதிவாகி இருக்கிறது.

அதேபோன்று, எர்டிகா, எஸ் க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்எல்6 ஆகிய மாடல்கள் அடங்கிய ரகத்தில் 23,699 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கிறது. இந்த ரகத்தில் 10.1 சதவீத வளர்ச்சியை மாருதி பதிவு செய்துள்ளது.

இதனால், பட்ஜெட் கார்களின் விற்பனை அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. மேலும், ஆன்லைன் மூலமாக கார்களை வாங்குவதற்கான வாய்ப்பையும் மாருதி அறிமுகம் செய்தது.

இதுமட்டும் இல்லாமல் பண்டிகை காலமும் துவங்கியதையடுத்து, கடந்த மாதத்தில் சிறப்பான வர்த்தகத்தை மாருதி பதிவு செய்துள்ளது. மேலும், நவராத்திரி, தீபாவளி பண்டிகை உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்கி வருவதையடுத்து, இந்த மாதமும் மாருதிக்கு சிறப்பான விற்பனையை பதிவு செய்யும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








