கைகொடுத்தது ஆன்லைன் திட்டம்... சரசரவென எகிறும் புக்கிங்... மாருதி ஹேப்பி அண்ணாச்சி!
தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஆன்லைன் புக்கிங் மற்றும் விற்பனை திட்டம் மாருதி கார் நிறுவனத்திற்கு கைகொடுத்துள்ளது. இதனால், அந்நிறுவனம் உற்சாகமடைந்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் தேசிய ஊரடங்கு சற்றே தளர்த்தப்பட்டு வருகிறது. மேலும், தொழில் நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளை தொடரவும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை பயன்படுத்தி, கார் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் வர்த்தக செயல்பாடுகளை துவங்கி இருக்கின்றனர். நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகியும் ஆரஞ்ச், பச்சை மண்டலப் பகுதிகளில் உள்ள டீலர்களை திறந்துள்ளது. மேலும்,மானேசர் ஆலையிலும் கார் உற்பத்தியை துவங்கி இருக்கிறது.

எனினும், தேசிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால், வாடிக்கையாளர்கள் சகஜமாக ஷோரூம் வந்து செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்து வருகிறது. இதனை மனதில் வைத்து, ஆன்லைன் மூலமாக கார் புக்கிங் மற்றும் விற்பனை நடைமுறைகளை மேற்கொள்வதற்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது.

இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது, ஆன்லைன் விற்பனை துவங்கப்பட்டது முதல் இதுவரை 5,000 பேர் தனது புதிய கார்களை புக்கிங் செய்துள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. அத்துடன், மானேசர் ஆலையில் இருந்து 2,300 கார்களை டீலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால், வர்த்தக நடவடிக்கைகள் படிப்படியாக சீரடையும் என்று அந்நிறுவனம் கருதுகிறது. மேலும், நாடு முழுவதும் உள்ள தனது 2,500 சேவை மையங்கள் மற்றும் 1900 சர்வீஸ் மையங்களில் வர்த்தகப் பணிகள் துவங்கப்பட்டுவிட்டதாக மாருதி தெரிவித்துள்ளது.

தற்போது திறக்கப்பட்டுள்ள தனது 60 சதவீத விற்பனை நிலையங்கள் ஊரகப் பகுதிகளில் உள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது. மெட்ரோ நகரங்களில் பல ஷோரூம்கள் கொரோனா ரெட் அலர்ட் மண்டலங்களில் உள்ளதால், திறக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

வரும் 17ந் தேதிக்கு பின்னர் ஊரடங்கு விதிகளில் மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், படிப்படியாக மெட்ரோ நகரங்களிலும் ஷோரூம்களில் வர்த்தக செயல்பாடுகள் துவங்குவதற்கான திட்டம் மாருதி வசம் உள்ளது.


Click it and Unblock the Notifications