மாருதி கார் நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக...!!
கொரோனா பிரச்னையால், மாருதி கார் நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக ஏப்ரல் மாதத்தில் விற்பனை பூஜ்யமாக பதிவாகி உள்ளது.

கொரோனா வைரஸ் மக்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. கடந்த மாதம் 24ந் தேதி முதல் நம் நாட்டில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து துறைகளும் முடங்கி உள்ளன. குறிப்பாக, இந்திய மொத்த உற்பத்தி திறனில் முக்கிய பங்களிப்பை அளித்து வரும் ஆட்டோமொபைல் துறை வரலாறு காணாத இக்கட்டான தருணத்தை கடந்து வருகிறது.

ஊரடங்கு காரணமாக, கடந்த மாதம் 24ந் தேதி முதல் அனைத்து கார் ஆலைகளும், டீலர்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், ஒட்டுமொத்த கார் உள்ளிட்ட வாகன உற்பத்தியும் அடியோடு முடங்கி உள்ளன

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகியும் தனது ஆலைகளை மூடி வைத்துள்ளது. இதனால், பெரும் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகிறது.

கடந்த மாதமும் விற்பனை தடாலடியாக குறைந்தது. அதாவது, முதல் 20 நாட்கள் வரை கார் விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த மாதத்தில் 79,080 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்தது. இது கடந்த 2019ம் ஆண்டு மார்ச் விற்பனையுடன் ஒப்பிடும்போது 32 சதவீதம் குறைவு.

அதுகூட பரவாயில்லை எனும் இல்லை ஏப்ரலில் ஏற்பட்டுவிட்டது. அந்நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக ஏப்ரல் மாதத்தில் விற்பனை பூஜ்யமாக பதிவாகி இருக்கிறது. அதாவது, உள்நாட்டில் ஒரு கார் கூட விற்பனை செய்யப்படவில்லை என்று அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பில் உள்ள கார்கள் யார்டுகளிலும், டீலர்களிலும் தேங்கி கிடக்கின்றன.

கடந்த காலங்களில் தொழிலாளர் பிரச்னையால் ஆலை மூடப்பட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டாலும், விற்பனையில் எந்த தொய்வும் இல்லை. அப்போது டிமான்ட் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது..

ஒரே ஆறுதலாக குஜராத்தில் உள்ள சுஸுகி ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 632 மாருதி கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

கடந்த 20ந் தேதி முதல் கொரோனா ஹாட்ஸ்பாட் அல்லாத பகுதிகளில் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பின்பற்றி உற்பத்திப் பணிகளை துவங்கலாம் என்று அறிவிக்கப்பட்டன. இதற்காக, சில விதிகளும் தளர்த்தப்பட்டன.

இதையடுத்து, ஹரியானா மாநிலம் குர்கான் மற்றும் மானேசரில் உள்ள ஆலைகளை திறப்பதற்கு மாருதி சுஸுகி சிறப்பு அனுமதி கோரியிருந்தது. இதில், நகர்ப்புறத்திற்கு வெளியில் உள்ள மானேசர் ஆலையை திறக்க குர்கான் மாவட்ட நிர்வாகம் சிறப்பு அனுமதி அளித்தது.

குர்கான், மானேசர் ஆலையில் 4,696 தொழிலாளர்கள் பணிபுரியும் நிலையில், மானேசர் ஆலையில் உற்பத்தி துவங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஒரே ஷிஃப்டில் 600 தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு உற்பத்தியை துவங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டதுடன், அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், இப்போது டீலர்கள் மூடப்பட்டு விற்பனை முற்றிலும் முடங்கி இருப்பதால், உற்பத்தி செய்தும் பிரயோஜனமாக இருக்காது என்று மாருதி சுஸுகி கருதுகிறது. இதனால், அனுமதி கிடைத்தாலும் லாக்டவுன் முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர் உற்பத்தியை துவங்க முடிவு செய்துள்ளது.

அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிகளை பின்பற்றி தனது கார் ஆலைகளை மூடி வைத்திரு்பபதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வென்டிலேட்டர் மற்றும் 3 ப்ளை முக கவசங்களை தனது சப்ளையர்கள் மற்றும் மருத்துவ உபகரண நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications








