மானேசர் ஆலையில் மீண்டும் கார் உற்பத்தியை துவங்கியது மாருதி!
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு இருந்த மானேசரில் உள்ள மாருதி கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக, ஒன்றரை மாதங்கள் வரை கார், பைக் உள்ளிட்ட வாகன உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும், டீலர்களும் மூடப்பட்டு விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையி்ல், கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய, மாநில அரசுகளின் நிபந்தனைகள், வழிகாட்டு முறைகளை பின்பற்றி வர்த்தக நடவடிக்கைகளை துவங்குவதற்கு கார், பைக் நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி தனது வர்த்தகப் பணிகளை துவங்கி இருக்கிறது.

கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் அமைந்துள்ள 600 டீலர்களை மாருதி கார் நிறுவனம் சில தினங்களுக்கு முன் திறந்து விற்பனையை துவங்கியது. அத்துடன், ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால், புதிய கார்களை முன்பதிவு செய்தோருக்கு வீட்டிலேயே கொண்டு போய் கார்களை டெலிவிரி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், கார் விற்பனை மற்றும் டெலிவிரிப் பணிகள் துவங்கி இருப்பதையடுத்து, கார் உற்பத்தியையும் துவங்கி இருக்கிறது மாருதி சுஸுகி. மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு ஹரியான மாநிலம் குர்கான் மற்றும் அதன் அருகே உள்ள மானேசரில் இரண்டு கார் ஆலைகள் உள்ளன. மேலும், மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகியின் நேரடி கட்டுப்பாட்டில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆலையிலும் மாருதி கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், குர்கான் ஆலை நகர எல்லைக்குள் இருப்பதால், தற்போது நகர எல்லைக்கு அப்பால் இருக்கும் மானேசர் ஆலையில் கார் உற்பத்தி சிறப்பு அனுமதியுடன் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு 5,000 கார்கள் வரை உற்பத்தி செய்ய முடியும்.

ஆனால், தற்போது சமூக இடைவெளி, தொழிலாளர்களுக்கான உடல்நல பரிசோதனை விஷயங்களை மனதில்வைத்து, குறைவான பணியாளர்களுடன் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. வரும் 17ந் தேதிக்கு பின்னர் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு, நிலைமை சீரடைந்தால், படிப்படியாக கார் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

மாருதியின் மானேசர் கார் ஆலையில்தான் டிசையர், வேகன் ஆர், எஸ் பிரெஸ்ஸா, சியாஸ் மற்றும் எர்டிகா கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த கார்களின் உற்பத்தி துவங்கப்பட்டு இருப்பதையடுத்து, முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விரைவில் டெலிவிரி கொடுக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 17ந் தேதிக்கு பின்னர் ஊரடங்கு விதிகளை பொறுத்து குர்கான் மற்றும் குஜராத் ஆலைகளில் உற்பத்திப் பணிகளை மாருதி துவங்கும் என தெரிகிறது. இதுதொடர்பாக, விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








