பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா?
மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவிற்கு நல்ல காரியம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் உலக நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகமாக இருப்பதால், இந்தியாவிற்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால், நாட்டின் சுற்றுச்சூழலும் மாசடைந்து வருகிறது. காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவிக்கும் உலகின் முன்னணி நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் முக்கிய நகரங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தலைநகர் டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்னை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்தியாவின் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னைக்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள்தான் முக்கிய காரணமாக உள்ளன. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் மற்றும் காற்று மாசுபாடு பிரச்னை ஆகிய இரண்டு பிரச்னைகளையும் களைவதற்காக, மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்கள், சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் மூலமாக கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடியும். அத்துடன் காற்று மாசுபாடு பிரச்னைக்கும் தீர்வு காண முடியும். எனவே இத்தகைய வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில், பிரதமர் நரேந்திர மோடியே மிகவும் ஆர்வமாக உள்ளார்.

இந்த சூழலில், கடந்த 2019-20ம் நிதியாண்டில், மாருதி சுஸுகி நிறுவனம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி இன்று (ஜூன் 5) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதன் மூலமாக இந்த தகவலை மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த 2019-20ம் நிதியாண்டில், இந்தியா முழுவதும் மொத்தம் 1,06,443 ஃபேக்டரி-ஃபிட்டட் (Factory-Fitted) சிஎன்ஜி வாகனங்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனமானது, சிஎன்ஜி வாகனங்களை கடந்த 2010ம் ஆண்டும், ஸ்மார்ட் ஹைப்ரிட் வாகனங்களை கடந்த 2015ம் ஆண்டும் அறிமுகப்படுத்தியது.

இதன்மூலம் தற்போது வரை இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1 மில்லியனுக்கும் (10 லட்சம்) மேற்பட்ட பசுமை வாகனங்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் தற்போதைய நிலையில், தனது பிரபல மாடல்களான ஆல்டோ, வேகன்ஆர், ஈக்கோ, டூர் எஸ், எர்டிகா மற்றும் சூப்பர் கேரி ஆகிய வாகனங்களில் ஃபேக்டரி-ஃபிட்டட் சிஎன்ஜி வேரியண்ட்களை விற்பனை செய்து வருகிறது.

பசுமை வாகனங்களை விற்பனை செய்வதன் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கனவிற்கு மாருதி சுஸுகி நிறுவனம் உறுதுணையாக இருந்து வருகிறது. நாட்டிற்கும் இது நன்மை பயக்கும் விஷயம் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தியாவில் சிஎன்ஜி எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் மத்திய அரசு தற்போது தீவிரமாக உள்ளது.

இந்த கட்டமைப்பை வலுவாக்குவதன் மூலம் சிஎன்ஜி வாகனங்களை வாங்குவதற்கு இன்னும் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் முன்வருவார்கள். இதேபோல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை உயர்த்துவதிலும் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. சார்ஜிங் ஸ்டேஷன்கள் மிக குறைவாக இருப்பது, இங்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமாகாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

எனவே சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளோடு, மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசின் இத்தகைய முயற்சிகளால், வரும் காலங்களில், இந்தியாவில் பசுமை வாகனங்களின் பயன்பாடு பரவலாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








