டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரும் மாருதி சுஸுகி கார்... புதிய தகவல் வெளியானது! என்னனு தெரியுமா?
மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை, டொயோட்டா நிறுவனத்திற்கு சப்ளை செய்யும் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளது.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பிரச்னை காரணமாக, இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை கதிகலங்கி போயுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக, இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. எனவே அன்றைய தினம் முதல் வாகன உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது.

அத்துடன் டீலர்ஷிப்கள் மூடப்பட்டதால் வாகன விற்பனையும் பாதிக்கப்பட்டது. எனினும் பொருளாதாரத்தை காப்பாற்றும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த மே 4ம் தேதி முதல் ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. எனவே சுமார் 40 நாட்கள் இடைவெளிக்கு பிறகு, வாகன உற்பத்தி மற்றும் விற்பனை கடந்த மே 4ம் தேதி முதல் தொடங்கின.

இடைப்பட்ட நாட்களில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவை மட்டும் பாதிக்கப்படவில்லை. புதிய கார் அறிமுகங்களும், அது தொடர்பான பணிகளும் தள்ளி போயுள்ளன. இதில், டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரவிருந்த மாருதி சுஸுகி காரின் அறிமுகமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டணி அமைத்திருப்பது தெரிந்த ஒன்றுதான்.

இந்த கூட்டணியின் முதல் தயாரிப்பான டொயோட்டா க்ளான்சா கார் கடந்த 2019ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக்தான் டொயோட்டா பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு, க்ளான்சா என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பலேனோ காரில் மாற்றங்களை செய்து, டொயோட்டா நிறுவனம் தன் பேட்ஜில் விற்பனை செய்து வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், மாருதி சுஸுகி நிறுவனம், தனது பலேனோ கார்களை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்திற்கு சப்ளை செய்து வருகிறது. மாருதி சுஸுகி பலேனோ அளவிற்கு இல்லை என்றாலும் கூட, டொயோட்டா க்ளான்சாவின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாகதான் இருந்து வருகிறது.

டொயோட்டா நிறுவனம் ஒரு மாதத்திற்கு சராசரியாக 2,000 முதல் 2,500 க்ளான்சா கார்களை மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. க்ளான்சாவிற்கு அடுத்தபடியாக மாருதி சுஸுகியின் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றான விட்டாரா பிரெஸ்ஸா காரை டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.

எனினும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டது. முதலில் கடந்த ஏப்ரல் மாதமே மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார், டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில், ஆட்டோமொபைல் துறை முற்றிலுமாக முடங்கி போயிருந்தது.

தற்போது ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக, புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் பணிகளில் கார் நிறுவனங்கள் மீண்டும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. இதன்படி விட்டாரா பிரெஸ்ஸா கார்களை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்திற்கு சப்ளை செய்யும் பணிகளை, மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிகவும் பிரபலமான சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக விட்டாரா பிரெஸ்ஸா உள்ளது. ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மார்க்கெட்டில் கடுமையான போட்டியை வழங்கி வருகிறது.

இந்த சூழலில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி ரக கார்களை சப்ளை செய்வதற்கு, மாருதி சுஸுகி நிறுவனத்தின் போர்டு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலமாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம் மிகவும் சவால் நிறைந்த காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் டொயோட்டா நிறுவனம் நுழைய உள்ளது. டொயோட்டா பிராண்டில் வெளிவரவுள்ள விட்டாரா பிரெஸ்ஸா கார் மட்டுமல்லாது, காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நடப்பாண்டு மேலும் சில நிறுவனங்களின் தயாரிப்புகளும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications