மாருதி ஆல்ட்டோ கே10 கார் விற்பனை நிறுத்தம்?
மாருதி ஆல்ட்டோ கே10 காரின் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பட்ஜெட் கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக மாருதி ஆல்ட்டோ கார் உள்ளது. இந்த கார் 800 சிசி மற்றும் 1,000 சிசி என இரண்டு விதமான பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. மாருதி ஆல்ட்டோ காரில் சற்றே திறன் மிக்க மாடலாகவும், கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஆல்ட்டோ கே10 கார் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு மிக்க தேர்வாக இருந்து வந்தது.

இந்த சூழலில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக ஆல்ட்டோ 800 கார் கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. எனினும், ஆல்ட்டோ கே10 காரின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வராமல் இருந்தது.

இந்த நிலையில், மாருதி ஆல்ட்டோ கே10 காரின் பிஎஸ்-6 மாடல் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டுவிட்டதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதத்துடன் பிஎஸ்-4 கார்களின் உற்பத்தி நிறுத்துவதாக மாருதி ஏற்கனவே அறிவித்துவிட்டது.

அதன்படி, மாருதி ஆல்ட்டோ கே10 காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், அத்துடன் முன்பதிவும் முடிந்துவிட்டதாம். தற்போது இருப்பு இருக்கும் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

மாருதி ஆல்ட்டோ கே10 காரில் 998சிசி கே10பி பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. இந்த எஞ்சின் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

இந்த கார் பெட்ரோல் எஞ்சின் மட்டுமின்றி, சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் தேர்விலும் கிடைத்து வந்தது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த பட்ஜெட்டில் கிடைக்கும் அதிக எரிபொருள் சிக்கனம் தரும் மாடலாக இருந்தது.

இந்த நிலையில், புதிய பாதுகாப்பு விதிகளுக்கு ஒப்பாக, ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர் மற்றும் ஹை ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டன.

எனவே, மாருதி ஆல்ட்டோ கே10 கார் பிஎஸ்-6 மாடலிலும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, கடந்த டிசம்பருடன் மாருதி ஆல்ட்டோ கே10 கார் மாடலுக்கு மூடுவிழா நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு மாருதி ஆல்ட்டோ கே10 கார் மாடல் விற்பனைக்கு கொணடு வரப்பட்டது. 2014ம் ஆண்டில் புதிய மாடலாக வந்தது. இந்த நிலையில், இந்த காரின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது என்றே கருதப்படுகிறது.

வரும் 2030ம் ஆண்டு வரை இந்த காருக்கான ஸ்பேர் பார்ட்ஸ் தங்கு தடையில்லாமல் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்று ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
Source: Mycarhelpline


Click it and Unblock the Notifications








