டொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...
பிடதியில் உள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலையில், விட்டாரா பிரெஸ்ஸா கார்களை உற்பத்தி செய்வது என்ற முடிவில் இருந்து மாருதி சுஸுகி பின் வாங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலை கர்நாடக மாநிலத்தில் இயங்கி வருகிறது. இங்கு மாருதி சுஸுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களை உற்பத்தி செய்வது என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அங்கு விட்டாரா பிரெஸ்ஸா கார்களை உற்பத்தி செய்யப்போவதில்லை என மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

ஆனால் விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு பதிலாக, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்வதற்கு, வேறு ஒரு கார் ஒதுக்கப்படும் எனவும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. ஆனால் டொயோட்டா கிர்லோஸ்கர் ஆலையில் உற்பத்தி செய்யப்படவுள்ள கார் எது? என்பதை மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவிக்கவில்லை.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் ஆலையில், நிர்வாகத்திற்கும், தொழிற்சங்கத்திற்கும் இடையே பிரச்னை நிலவி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று எனும் நிலையில், இந்த பிரச்னை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை.

''டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்வதற்கு, விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு பதிலாக, வேறு ஒரு காரை மாற்றி கொள்வதற்கு வாரியம் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது'' என்று இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கர்நாடக மாநிலத்தில் உள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலையில், விட்டாரா பிரெஸ்ஸா கார்களை உற்பத்தி செய்வதற்கு, மாருதி சுஸுகி நிறுவனத்தின் வாரியம் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்த டொயோட்டா தொழிற்சாலை, பெங்களூர் நகருக்கு அருகே பிடதி என்னும் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஏற்கனவே கூட்டணி அமைத்திருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதன் அடிப்படையில் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை, மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்திற்கு விற்பனை செய்து வருகிறது.

அதன்பின் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், ஒரு சில மாற்றங்களை செய்து, அந்த காரை அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் இந்திய சந்தையில் விற்பனை செய்கிறது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் தற்போது விற்பனையில் உள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர்.

இதே அடிப்படையில் மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களையும், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் பெற்று, இந்திய சந்தையில் க்ளான்சா என்ற பெயரில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அர்பன் க்ரூஸர் மற்றும் க்ளான்சா ஆகிய இரண்டு கார்களும் தற்போது டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்திற்கு ஓரளவிற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications







