கஸ்டமர்ஸ்கிட்ட இனி அதுக்கும் சார்ஜ் பண்ணுங்க... டீலர்களுக்கு ரகசியமாக அதிகாரம் கொடுத்த மாருதி சுஸுகி
வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மாருதி சுஸுகி நிறுவனம் தனது டீலர்களுக்கு அதிகாரம் ஒன்றை வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பிரச்னை எதிரொலியால், இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கே இப்படி ஒரு நிலைமை என்றால், சாமானிய மக்களின் கஷ்டங்களை சொல்லவா வேண்டும்?

கொரோனா வைரஸ் பிரச்னை கிளம்பிய பிறகு இந்தியாவில் பலர் வேலையிழந்துள்ளனர். அத்துடன் பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் செலவுகளை குறைக்க தொடங்கியுள்ளனர். அத்துடன் சேமிப்புகளை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் பொதுமக்கள் இறங்கியுள்ளனர். எனவே வாகன விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.

குறிப்பாக கார் விற்பனை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. கார்கள் விலை உயர்ந்தவை என்பதால், அவற்றை வாங்குவதாக இருந்த திட்டத்தை பொதுமக்கள் தற்போது ஒத்திவைத்து வருகின்றனர். ஒரே நேரத்தில் பலர் கார்களுக்கான முன்பதிவுகளை ரத்து செய்து வருவதால், உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவை பொறுத்தவரை மாருதி சுஸுகி, கியா மற்றும் எம்ஜி மோட்டார் போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் முன்பதிவுகளை கைவசம் வைத்திருக்கும். இந்த நிறுவனங்களின் கார்களை வாங்க வேண்டும் என்றால், முன்பதிவு செய்து விட்டு குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும். அதன்பின்னர்தான் கார் டெலிவரி செய்யப்படும்.

ஆனால் இந்த நிறுவனங்களின் கார்களை வாங்குவதற்காக ஏற்கனவே செய்திருந்த முன்பதிவுகளை பலர் தற்போது ரத்து செய்து வருவதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களின் முன்பதிவுகளை ரத்து செய்தால், கார் நிறுவனங்களுக்கு அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். முன்பதிவு பற்றிய தரவுகள் மிகவும் முக்கியமானவை.

இதனை அடிப்படையாக வைத்துதான் எவ்வளவு கார்களை உற்பத்தி செய்ய வேண்டும்? டீலர்ஷிப்களுக்கு எவ்வளவு கார்களை ஒதுக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை கார் நிறுவனங்கள் திட்டமிடும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முன்பதிவு தரவுகளை உருவாக்க நேரம், உழைப்பு மற்றும் பணம் ஆகியவற்றை கணிசமான அளவில் கார் நிறுவனங்கள் செலவிடுகின்றன.

ஒரு சில வாடிக்கையாளர்கள் மட்டும் முன்பதிவுகளை ரத்து செய்வதால், பெரிதாக பிரச்னை ஏற்பட்டு விடாது. ஆனால் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் முன்பதிவுகளை திடீரென ரத்து செய்தால், தேவையில்லாத குழப்பமும், சிக்கலும் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியைதான் கார் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மாருதி சுஸுகி நிறுவனம் முன்பதிவு ரத்து பிரச்னையை பெரிய அளவில் எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு மூன்று கார்களுக்கான முன்பதிவுகள் வந்தால், அதில் ஒன்று ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக முன்பதிவை ரத்து செய்பவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன்படி வாடிக்கையாளர் ஒருவர் காருக்கான முன்பதிவை ரத்து செய்தால், அவரிடம் இருந்து மாருதி சுஸுகி டீலர்கள் அதிகபட்சமாக 500 ரூபாயை வசூலிக்க முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பிராஸஸிங் கட்டணமாக வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து ரஸ்லேன் செய்தி வெளியிட்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் தனது டீலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதில், முன்பதிவு ரத்து செய்யப்படுவது குறித்து கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது. முன்பதிவு ரத்து செய்யப்படும் விகிதம் அதிகமாக இருப்பதால், எவ்வளவு கார்களை தயாரிக்க வேண்டும் என்பதை திட்டமிடுவதிலும், உண்மையான சந்தை தேவை என்ன? என்பதை கணக்கிடுவதிலும் பிரச்னைகள் ஏற்படுகின்றனவாம்.

எனவே இதனை ஈடுகட்டும் விதமாக, வாடிக்கையாளர் ஒருவர் தான் செய்த முன்பதிவை திரும்ப பெறும் பட்சத்தில், அவரிடம் இருந்து அதிகபட்சமாக 500 ரூபாய் வரை வசூலிப்பதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் டீலர்களுக்கு அதிகாரமளித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்பதிவு ரத்து செய்யப்படுவதால் ஏற்படும் அசௌகரியத்திற்கு இது ஈடாக அமையும்.

தற்போதைய நிலையில் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும், ஒருவேளை முன்பதிவு ரத்து செய்யப்படும் பட்சத்தில், முன்பதிவு தொகையை முழுமையாக வாடிக்கையாளர்களிடம் திருப்பி கொடுத்து விடுகின்றன. காரை வாங்குவதற்கு சாத்தியமுள்ள வாடிக்கையாளர்கள், தங்கள் பணத்தை இழந்து விடுவோமா? என்ற அச்சம் இல்லாமல் முன்பதிவு செய்ய வேண்டும் என்பதே இதற்கு பின்னால் இருக்கும் காரணம்.

இந்த சூழலில், மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை காரணமாக, வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்தின் கார்களை முன்பதிவு செய்வது குறையுமா? என்று கேட்டால், நிச்சயமாக அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவுதான். ஏனெனில் பல லட்சங்களை செலவழித்து கார் வாங்க முன்பதிவு செய்பவர்களுக்கு 500 ரூபாய் என்பது பெரிய தொகையாக இருக்க வாய்ப்பில்லை.


Click it and Unblock the Notifications








