சூப்பர்... இந்திய ரயில்வே - மாருதி சுஸுகி கூட்டாக இணைந்து செய்த நல்ல காரியம்... என்னனு தெரியுமா?
இந்திய ரயில்வே மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து பணியாற்றியதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி திகழ்கிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை இந்திய வாடிக்கையாளர்கள் விரும்புவதற்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், மைலேஜ் மற்றும் குறைவான விலை ஆகியவை மிகவும் முக்கியமானவை. இதன் காரணமாகதான் மாருதி சுஸுகி நிறுவனத்தால் இங்கு நம்பர்-1 ஆக இருக்க முடிகிறது.

இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு, ஹரியானா மாநிலம் குர்கான், மனேசர் உள்ளிட்ட இடங்களில் கார் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இதில், குர்கான் ஆலையில், வேகன் ஆர், எர்டிகா, எக்ஸ்எல்-6, எஸ்-க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா, இக்னிஸ் மற்றும் ஈக்கோ ஆகிய கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

அதே சமயம் மனேசர் ஆலையில், ஸ்விஃப்ட், சியாஸ், பலேனோ மற்றும் செலிரியோ ஆகிய கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அனைத்து தொழிற்சாலைகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் கார்களை சப்ளை செய்து வருகிறது.

கார்களை சப்ளை செய்வதற்கு லாரிகள் மட்டுமல்லாது, இந்திய ரயில்வேயின் உதவியையும் மாருதி சுஸுகி நிறுவனம் பெற்று வருகிறது. இந்த வகையில் கடந்த 6 ஆறு ஆண்டுகளில் இந்திய ரயில்வே மூலம் 6.70 லட்சம் கார்களை அனுப்பியுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை மாருதி சுஸுகி இன்று (ஜூலை 8ம் தேதி) வெளியிட்டது.

இந்த செயல்முறையின் மூலம் 3,000 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வு தவிர்க்கப்பட்டுள்ளது. இது இந்த செயல்முறையின் முக்கியமான பலனாக பார்க்கப்படுகிறது. இதுதவிர 100 மில்லியன் லிட்டர் எரிபொருளும் சேமிக்கப்பட்டுள்ளது. இந்தியா எரிபொருளுக்கு பெரும்பாலும் வெளிநாடுகளைதான் நம்பியுள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் இறக்குமதியின் மூலமாகவே பூர்த்தியாகிறது. எனவே இதுவும் ஒரு நல்ல விஷயம்தான். அத்துடன் தேசிய நெடுஞ்சாலைகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரி டிரிப்களும் தவிர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக ரயில்வே மூலமாக கார்கள் அனுப்பப்பட்டதில் இருந்து, தற்போது வரையிலான தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி நிறுவனம் ரயில் போக்குவரத்து மூலம் கார்களை அனுப்புவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்படி கடந்த நிதியாண்டில், மாருதி சுஸுகி நிறுவனம் 1.78 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை இந்திய ரயில்வே மூலம் அனுப்பியுள்ளது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகமாகும்.

சாலை மார்க்கமாக லாரிகளில் கார்களை அனுப்புவதை காட்டிலும், இந்திய ரயில்வே மூலமாக கார்களை அனுப்புவதில் ரிஸ்க் குறைவு எனவும் கூறப்படுகிறது. அதாவது சாலை விபத்து போன்ற அபாயங்களை தவிர்த்து கொள்ள முடியும். எனவே இந்திய ரயில்வே மூலம் கார்களை அனுப்புவதில், மாருதி சுஸுகி நிறுவனம் அதிக ஆர்வம் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications







