கேமிராவின் கண்களில் சிக்கிய பென்ஸ் மின்சார கார்... கோனா மின்சார காரைவிட அதிக ரேஞ்ச் வழங்கும்...
பென்ஸ் நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் மின்சார கார் கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. இந்த கார்குறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

சொகுசு கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், விரைவில் இந்தியாவில் மின்சார காரை விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது.
இந்த கார் தற்போது விற்பனையில் இருக்கும் மின்சார கார்களைக் காட்டிலும் அதிக திறன் கொண்டதாக இருக்கலாம் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இதனை உறுதி செய்கின்ற வகையில் பென்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கும் மின்சார கார் ஒரு முழுமையான சார்ஜில் 445 முதல் 471 கிமீ வரை ரேஞ்சை வழங்கும் என்ற தகவல் பரவிய வண்ணம் இருக்கின்றது.
இந்த தகவல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல் இல்லையென்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், இது மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் அதீத ஆவலை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதுபோன்று முன்பு வதந்தியாக பரவிய பல தகவல்கள் உண்மை என நிரூபனமாகியிருக்கின்றன. அந்தவகையில், இந்த எதிர்பார்ப்பும் நிறைவேறலாம் என பென்ஸ் ரசிகர்கள் மட்டுமல்லாது வாகனத்துறை வல்லுநர்கள் நம்புகின்றனர்.
இத்தகைய எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் சேகரித்து வைத்திருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், அதன் இந்தியாவிற்கான முதல் மின்சார காரை வருகின்ற ஏப்ரல் மாதத்திற்கு அறிமுகம் செய்துவிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை உறுதி செய்கின்ற வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சின்னம் பொருந்திய மின்சார கார் ஒன்று மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது, இக்யூசி என்ற எஸ்யூவி ரக காராகும். இந்த சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த கார் இதுபோன்று இந்தியாவில் தோன்று முதல் முறையல்ல. ஏற்கனவே, 2020 வாகன கண்காட்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து தற்போது தீவிர பலபரீட்சையில் அந்த மின்சார கார் ஈடுபட்டு வருகின்றது.

இதைத்தொடர்ந்து, இந்த காரை விளம்பரப்படுத்தவும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆரம்பித்திருக்கின்றது. அந்த விளம்பர வீடியோவில் புதிய மின்சார காரின் சிறப்பு வசதிகளை வெளிப்படுத்துகின்ற வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நிலையிலேயே மும்பை-புனே நெடுஞ்சாலையில் இந்த கார் பல பரீட்சை செய்திருக்கின்றது.

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் மின்சார மோட்டார் ஏடபிள்யூடி அல்லது 4மேட்டிக் ஆகிய திறனை வெளிப்படுத்தும் அம்சம் இடம்பெற்றிருக்கின்றது. அது, அதிகபட்சமாக 408 பிஎச்பி பவரையும், 760 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த அதீத திறனானது 0-100 என்ற வேகத்தை வெறும் 5.1 விநாடிகளிலேயே தொட உதவும். அதேசமயம், இந்த கார் உச்சபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூ மின்சார கார் ஸ்பை புகைப்படம்
இதற்கான திறனை 80kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 11 மணி நேரங்கள் தேவைப்படுமாம். இதைக்கண்டு பயந்துவிடாதீர்கள், வழக்கமான பிளக் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போதே இந்த அதிகபட்ச நேரம் எடுத்துக்கொள்ளப்படும். மாறாக, இந்த மின்சார காரை டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது 80 சதவீத சார்ஜை அடைய வெறும் 40 நிமிடங்களே போதும்.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சந்தை இன்றளவும் ஆரம்பநிலையிலேயே இருக்கின்றது. எரிபொருள் வாகனங்களுக்கு கிடைத்து வருவதைப்போன்ற வரவேற்பு மின்சார வாகனங்களுக்குக் கிடைக்கவில்லை. இதற்கு மின்சார வாகனங்களின் உச்சபட்ச விலையும் ஓர் காரணமாக இருக்கின்றது.
அதேசமயம், மின்சார வாகனங்களைச் சார்ஜ் செய்வதற்கு போதுமான கட்டுமான வசதி இல்லாததும் முக்கிய குறைபாடு இருக்கின்றது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை அடி தளத்திலேயே இருக்கின்றது. ஆகையால், மலிவு விலை வாகனங்களைக் களமிறக்கி மக்களைக் கவர டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் போன்ற பெரும் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

ஆனால், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இக்யூசி 400 லக்சூரி மின்சார கார் எம்மாதிரியான பங்கினை இந்திய சந்தையில் வகிக்கும் என தெரியவில்லை. ஏனெனில், இந்த கார் அதிக விலைக் கொண்ட பிரிமியம் தரம் கொண்ட காராக களமிறங்க இருக்கின்றது. முன்னதாக இந்நிறுவனம் அறிமுகம் செய்ய பல மின்சார கார்கள் இதேபோன்றதாகவே இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








