ஹெக்டர் ஆம்புலன்ஸ்... சட்டென முடிவு எடுத்து எம்ஜி செய்த நல்ல காரியம்!
கொரோனா தடுப்புப் பணிகளில் எம்ஜி மோட்டார் பல்வேறு வழிகளிலும் அரசுக்கும், மக்களுக்கும் உதவி வருகிறது. அந்த வகையில், அந்த நிறுவனம் தனது ஹெக்டர் எஸ்யூவியை ஆம்புலன்ஸ் வாகனமாக மாற்றி அரசு மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறது.

குஜராத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால், நோயாளிகளை அழைத்து வருவது, கொண்டு விடுவதற்கான அவசர கால ஆம்புலன்ஸ் ஊர்திகளின் தேவை அதிகரித்துள்ளது.

இதனை மனதில் வைத்து, தனது ஹெக்டர் எஸ்யூவியை ஆம்புலன்ஸ் வாகனமாக மாற்றி அரசு மருத்துவமனைக்கு வழங்கி உள்ளது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

ஆமதாபாத் நகரை சேர்ந்த நட்ராஜ் பாடி பில்டிங் நிறுவனத்தின் உதவியுடன் எம்ஜி ஹெக்ட்ர எஸ்யூவி ஆம்புலன்ஸ் வாகனமாக மாற்றப்பட்டுள்ளது. வெறும் 10 நாட்களில் இந்த பணிகளை நட்ராஜ் பாடி பில்டிங் நிறுவனம் முடித்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அதிநவீன ஸ்ட்ரெச்சர் (தூக்குப் படுக்கை) பொருத்தப்பட்டுள்ளது. எளிதாக நோயாளிகளை ஏற்றி இறக்குவதற்கு வசதியாக இந்த படுக்கையானது வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர்த்து, செயற்கை சுவாசம் வழங்குவதற்கான வசதி, மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், 5 பேராமீட்டர் மானிட்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும், தீத்தடுப்பு சாதனம், நோயாளியின் உதவியாளர் அமர்வதற்கான ஒரு இருக்கை வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தேவையான சைரன் மற்றும் விளக்குகள், மருத்துவ கருவிகளுக்கு பிரத்யேக பேட்டரி ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனத்தை குஜராத் மாநிலம் வதோதரா மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் எம்ஜி மோட்டார் ஒப்படைந்துள்ளது. எம்ஜி கார் தொழிற்சாலை அமைந்துள்ள ஹலோல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு இந்த வாகனம் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

மிட்சைஸ் எஸ்யூவி கார்களில் மிக அதிக இடவசதி கொண்ட கார் மாடலாக எம்ஜி ஹெக்டர் உள்ளது. இதனால், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தூக்குப் படுக்கை ஆகியவை கச்சிதமாக பொருத்தப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனமாக மாற்றப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








