ஆவலுடன் எதிர்பார்க்கும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் அறிமுக தேதி விபரம்
பெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்கும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலையில் ஹெக்டர் எஸ்யூவியுடன் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கியது. முதல் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஹெக்டர் எஸ்யூவிக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது. அசத்தும் டிசைன், இன்டர்நெட் வசதி, சிறந்த எஞ்சின் மற்றும் சரியான விலை போன்றவை இந்த காருக்கு பெரிய அளவிலான வர்த்தகத்தையும், எம்ஜி பிராண்டுக்கு அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது.

இந்த நிலையில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் 5 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதி கொண்டதாக கிடைக்கிறது. இதில், 7 சீட்டர் மாடல் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தும், 7 சீட்டர் மாடலுக்கு குறிப்பிடத்தக்க வர்த்தக வாய்ப்பும் இருப்பதை எம்ஜி மோட்டார் உணர்ந்து கொண்டது.

இதற்காக, ஹெக்டர் அடிப்படையிலான ஹெக்டர் ப்ளஸ் என்ற மாடலை உருவாக்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியானது 6 சீட்டர் மாடலில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போதே இது பெரும் ஆவலை வாடிக்கையாளர் மத்தியில் ஏற்படுத்தியது. கடந்த ஏப்ரலில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கொரோனாவால் அறிமுகம் சற்று தள்ளிப்போன நிலையில், வரும் ஜூலை 1ந் தேதி புதிய ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

5 சீட்டர் ஹெக்டர் எஸ்யூவியில் இருந்து வேறுபடுத்தும் விதமாக சிறிய அளவிலான டிசைன் மாற்றங்களுடன் இந்த மாடல் வர இருக்கிறது. க்ரில், ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், டெயில் லைட்டுகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த 6 சீட்டர் ஹெக்டர் ப்ளஸ் மாடலில் மூன்று வரிசை இருக்கை அமைப்புடையதாக இருந்தது. அத்துடன், நடுவரிசையில் கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது 7 சீட்டர் மாடலிலும் எதிர்பார்க்கப்படுகிறது. 7 சீட்டர் மாடலில் நடுவரிசையில் பெஞ்ச் இருக்கை கொடுக்கப்பட்டு இருக்கும்.

ஹெக்டர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் தேர்வுகள்தான் இதிலும் இடம்பெறும். இந்த மாடலில் வழங்கப்பட உள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 173 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

புதிய ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியில் நேரடி இன்டர்நெட் வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், கீ லெஸ் என்ட்ரி, பிரிமீயம் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி ரூ.14 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மார்க்கெட்டை குறிவைத்து நிலைநிறுத்தப்பட உள்ளதாகவும் அந்நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கும் போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








