எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீடட்ர் எஸ்யூவி எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மாடலை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இப்போது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக இது அமைந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவி மூலமாக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகிவிட்டது. இந்த சூழலில், தனது சந்தையை வலுவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும், ஹெக்டர் எஸ்யூவிக்கு கிடைத்த வரவேற்பு உற்சாகத்தை தந்துள்ள அதேவேளையில், ஹெக்டர் மீதான மற்றொரு எதிர்பார்ப்பு வாடிக்கையாளர் மத்தியில் இருப்பதை அந்த நிறுவனம் உணர்ந்து கொண்டது.

அதாவது, இதன் ரகத்திலேயே மிகப்பெரிய எஸ்யூவியாகவும், அதிக இடவசதி கொண்ட மாடலாகவும் இருந்தும் 5 சீட்டர் மாடல் என்பது சிலருக்கு குறையாக இருந்து வந்தது. இந்த குறையை போக்குவதற்கு உடனடியாக எம்ஜி மோட்டார் முடிவு செய்தது.

இதற்காக, மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வுகளை வழங்கும் விதத்தில், ஹெக்டர் ப்ளஸ் என்ற மாடலை கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருந்தது. அப்போதே, ஹெக்டர் பிரியர்களையும், இந்த பட்ஜெட்டில் எஸ்யூவி காரை தேர்வு செய்ய காத்திருப்போரின் கவனத்தையும் ஈர்த்தது.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி மாடலானது இந்த ஆண்டு மத்திக்குள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால், கொரோனா வந்ததால், மொத்த திட்டமும் இப்போது தடுமாறி வருகிறது.

இருப்பினும், கொரோனா பிரச்னையால் பிற நிறுவனங்களை போல பல மாதங்கள் ஹெக்டர் ப்ளஸ் அறிமுகத்தை ஒத்திப்போட கூடாது என்று எம்ஜி முடிவு செய்தது. இதுகுறித்து அண்மையில் கூடிய விரைவில் விற்பனைக்கு கொண்டு வந்துவிடுவோம் என்றும் தெரிவித்தது.

அதன்படி, வரும் ஜூன் மாதம் ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு எம்ஜி மோட்டார் முடிவு செய்துள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 5 சீட்டர் மாடலில் இருந்து ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் தோற்றத்தில் சிறிய மாறுபாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிய கருப்பு வண்ண க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், பம்பர் அமைப்பு, பனி விளக்குகள், புதிய டெயில் லைட்டுகள், இரட்டை குழல் சைலென்சர் அமைப்பு ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

ஹெக்டர் எஸ்யூவியில் இருக்கும் 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

முதல்கட்டமாக ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியில் 6 சீட்டர் ஆப்ஷன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிது காலம் கழித்து 7 சீட்டர் மாடலிலும் ஹெக்டர் ப்ளஸ் கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியில் 170 எச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் டர்போ எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 143 எச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இந்த கார் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்டதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500, விரைவில் வரும் டாடா க்ராவிட்டாஸ் உள்ளிட்ட 7 சீட்டர் எஸ்யூவி மாடல்களுக்கு ஹெக்டர் ப்ளஸ் கடுமையான சந்தைப் போட்டியை கொடுக்கும். ரூ.14 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








