எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவிக்கு வெயிட் பண்றீங்களா?
கூடுதல் இருக்கை வசதி கொண்ட எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறித்த மிக மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி சூப்பர் ஹிட் மாடலாக மாறியது அறிந்ததே. மிக பிரம்மாண்டமான தோற்றத்தில், அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் வந்த ஹெக்டர் எஸ்யூவியை இந்தியர்கள் உச்சிமுகர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி 5 சீட்டர் மாடலில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் மத்தியில் 7 சீட்டர் மாடல் குறித்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இதனை கருத்தில்கொண்டு ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடலானது கடந்த பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஜூலையில் புதிய ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி விற்பனைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது. ட்விட்டரில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் ஜூலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம் என்று பதில் அளித்துள்ளது. அதாவது, நிலைமை மேம்பட்டால், நிச்சயம் அடுத்த மாதம் வருவது உறுதியான விஷயமாகவே கருதலாம்.

ஹெக்டர் 5 சீட்டர் மாடலில் இருந்து சில சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் இருக்கை வசதிகளுடன் ஹெக்டர் ப்ளஸ் வர இருக்கிறது. மூன்றாவது வரிசைக்காக ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் நீளம் 40 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், வீல்பேஸில் எந்த மாற்றமும் இல்லை.

எல்இடி பகல்நேர விளக்குகள், கருப்பு வண்ண க்ரில் அமைப்பு, புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், டெயில் லைட்டுகளை இணைக்கும் விதத்திலான ரிஃப்லெக்டர்கள் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

உட்புறத்தில் பல வசதிகள் தக்கவைக்கப்பட்டுள்ளன. டேஷ்போர்டு அமைப்பு, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பனோரமிக் சன்ரூப், ஐஸ்மார்ட் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியானது 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் 6 சீட்டர் மாடல்தான் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 சீட்டர் மாடலில் நடுவரிசையில் கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கும். 7 சீட்டர் மாடலில் நடுவரிசையில் பெஞ்ச் இருக்கை அமைப்பு இடம்பெற்றிருக்கும்.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 173 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் மாடலில் 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருக்கும்.

இரண்டு எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். பெட்ரோல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக வழங்கப்படும். மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் விரைவில் டாடா கிராவிட்டாஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும்.


Click it and Unblock the Notifications








