கொரோனா அச்சம்: புதிய கார்களை டீலர்கள் எப்படி சுத்தம் செய்கிறார்கள் தெரியுமா? எம்ஜி வெளியிட்ட வீடியோ!
கொரோனா அச்சம் நிலவுவதால் எம்ஜி நிறுவனம் அதன் புதிய கார்களை டெலிவரி செய்வதில் அதிரடி நடவடிக்கை ஒன்று சேர்த்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இந்த வைரஸ் தொற்று உயிர் கொல்லி நோயாக இருக்கின்ற காரணத்தால் மக்கள் அனைவரும் வயிற்றில் புளி கரைக்க, அச்சத்தில் உரைந்திருக்கின்றனர். இந்த அச்சத்தை மேலும் அதிகரிக்கின்ற வகையில் கொரோனா அதன் வீரியத்தை அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது.

மேலும், நாளுக்கு நாள் அதன் வீரியம் தீவிரமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இதனால், வைரஸ் தொற்றால் அதிகமானோர் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
ஆகையால், இந்த நிலைக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகள் பல வான்-தரை போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்திற்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளது. இதன்மூலம் தற்காலிகமாக கொரோனா பரவலைத் தவிர்க்க முடியும் என நம்பப்படுகின்றது.

இந்நிலையில், அரசின் இந்த முயற்சியில் வாகன உற்பத்தி நிறுவனமான எம்ஜி-யும் களமிறங்கியிருக்கின்றது. அது டெலிவிரி செய்யும் ஒரு வாகனத்தையும் பிரத்யேக முறையில் சுத்தப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அதன் வாகனங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் எம்ஜி நிறுவனம் மிக அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர் ஷோரூமை விசிட் செய்ய வரும்போது அவரை முற்றிலுமாக பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றது. மேலும், அவரின் பாதுகாப்பை உறுதிச் செய்கின்ற வகையில் அவருக்கு மாஸ்க் வழங்கப்படுகின்றது. இதையடுத்து, அவரை டெஸ்ட் டிரைவ் செய்ய அனுமதிக்கின்றது.

தொடர்ந்து, அவர் சென்ற பின்னர் காரை ஒட்டுமொத்தமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றது. மேலும், அவர் பயன்படுத்திய தேநீர் கோப்பை உள்ளிட்டவையும் பிரத்யேக முறையில் சுத்தம் செய்யப்படுகின்றது.
இவ்வாறு, ஒவ்வொரு நிலையிலும் தனது வாடிக்கையாளர்களை வைரஸ் தொற்றில் இருந்து காக்க பல முக்கிய செயல்பாடுகளை அது செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக, காரை டெலிவரி செய்யும்போது சிறப்பான முறையில் இருக்கை, கியர், ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவற்றிற்கு கவர் போர்த்தப்பட்டு டெலிவரி செய்யப்படுகின்றது. இந்த செயல்முறையை விளக்குகின்ற வகையில் எம்ஜி நிறுவனம் வீடியோவை வெளியிட்டிருக்கின்றது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் வேலையில் உலகளவில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையிலேயே எம்ஜி நிறுவனம் புதிதாக கிருமி நாசினி நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியிருக்கின்றது. இது தற்போது மிக அத்தியாவசியங்களில் ஒன்றாக உள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக உலகளவில் இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்திருக்கின்றனர். மேலும், கொரோனா வைரஸால் இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

இந்த எண்ணிக்கை உயர்வைக் கட்டுபடுத்த மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை. மேலும், தங்களை மட்டுமின்றி தங்களைச் சுற்றியிருக்கும் சுற்றுப்புறத்தையும் தூய்மையானதாக வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது.

இந்தசூழ்நிலையின் காரணத்தினாலயே எம்ஜி நிறுவனம் தரமான நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, முன்னதாக இந்திய மக்களை கொரோனாவில் இருந்து காப்பதற்காக ரூ. 2 கோடியை நிவாரண நிதிக்காக வழங்கியது குறிப்பிடத்தகுந்தது. இதில், ஒரு கோடி ரூபாயை அந்நிறுவனம் நேரடியாகவும், மற்றொரு கோடி ரூபாயை அந்நிறுவனத்தின் ஊழியர்களின் வாயிலாகவும் திரட்டி வழங்கியிருந்தது.

எம்ஜி நிறுவனம் இந்தியாவில் கடந்த வருடம்தான் கால் தடம் பதித்தது. இந்நிறுவனம், ஹெக்டர் மற்றும் ஈஇசட்எஸ் என்ற மின்சார கார்களை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. இவ்விரண்டிற்கும் இங்கு நல்ல விற்பனை விகிதம் கிடைத்து வருகின்றது. ஆனால், தற்போது ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவால் இந்தியா மட்டுமின்ற உலக நாடுகளின் அனைத்து துறையும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








