14 புதிய கார்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் கலக்க காத்திருக்கும் எம்ஜி மோட்டார்ஸ்
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் 14 புதிய கார்களை விரைவில் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் வலுவான சந்தையுடன் பயணத்தை துவங்கி இருக்கிறது. முதல் மாடலாக வந்த ஹெக்டர் எஸ்யூவி ஸ்திரமான சந்தை பங்களிப்பை வழங்கி வருவதால் பெரும் உற்சாகத்துடன் எதிர்கால திட்டங்களை செயல்படுத்தும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்தியாவில் இரண்டாவது மாடலாக புத்தம் புதிய இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை வரும் 27ந் தேதி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. ஹெக்டர் போன்றே, இந்த எஸ்யூவியிலும் ஏராளமான சிறப்பம்சங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில், அடுத்த மாதம் நடக்க இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் வகை வகையான கார்களுடன் கலக்க இருக்கிறது. இதுகுறித்த விபரங்களையும் வெளியிட்டு இருக்கிறது.

அதாவது, மொத்தம் 14 புதிய கார் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வர இருக்கிறது எம்ஜி மோட்டார்ஸ். இதில், ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி வகைகளில் மட்டுமின்றி மின்சார கார்கள், டிரைவரில்லாமல் இயங்கும் கார் மாடல்களும் அடங்கும்.

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு வெளிநாடுகளில் விற்பனை செய்யும் புதிய கார் மாடல்கள் இந்தியாவில் அடுத்தடுத்து விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சாபா கூறுகையில்," இந்தியாவில் நீண்ட கால சந்தையை மனதில் வைத்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையிலான போக்குவரத்து தீர்வுடன் புதிய மாடல்களை களமிறக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவில் மிகச் சிறப்பான தொழில்நுட்பங்களுடன் ஸ்திரமான இடத்தை பிடிக்கும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம். வாடிக்கையாளருக்கு உன்னதமான அனுபவம், புதுமையான தொழில்நுட்பங்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் எங்களது கார் மாடல்களை காட்சிப்படுத்த உள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியாவில் பல புதிய கார் மாடல்களை களமிறக்குவதற்கு ஏதுவாக, இரண்டாவது கார் தொழிற்சாலையை பெறுவதற்கான முயற்சிகளில் எம்ஜி மோட்டார்ஸ் இறங்கி இருக்கிறது. தற்போது குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள தொழிற்சாலை தவிர்த்து, மஹாராஷ்டிராவில் மற்றொரு தொழிற்சாலையை வாங்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலமாக, புதிய மாடல்களின் உற்பத்தியில் எந்த பிரச்னையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும். கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குறித்த காலத்தில் டெலிவிரி கொடுப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் மாடலாக வந்த ஹெக்டர் என்ற மிட்சைஸ் எஸ்யூவி விற்பனையில் சிறப்பாக இருந்து வருகிறது. இதுவரை 15,000க்கும் அதிகமான ஹெக்டர் எஸ்யூவிகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவை சேர்ந்த செயிக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. எம்ஜி மோட்டார்ஸ் பிராண்டுடன் இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளில் மிகவும் முனைப்பாக இருக்கிறது செயிக் குழுமம்.


Click it and Unblock the Notifications








