மைல்ஸ் டாக்சி நிறுவனத்துடன் கைகோர்த்த எம்ஜி... ஹெக்டர் எஸ்யூவிக்கு குத்தகை திட்டம் அறிமுகம்!
மைல்ஸ் டாக்சி நிறுவனத்துடன் இணைந்து கார்களை குத்தகைக்கு விடும் திட்டத்தை எம்ஜி மோட்டார் அறிமுகம் செய்துள்ளது.

கார்களை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் செல்ஃப் டிரைவ் டாக்சி நிறுவனங்களில் பிரபலமானதாக மைல்ஸ் நிறுவனம் உள்ளது. அனைத்து பிராண்டு கார்களையும் வாடிக்கையாளர்கள் எளிதாக வாடகைக்கு எடுத்து ஓட்டிச்செல்லும் வாய்ப்பை இந்த நிறுவனம் வழங்குகிறது. ஓட்டுனர் இல்லாததால், சொந்த காரில் செல்லும் அனுபவத்தை இந்த திட்டம் வழங்குகிறது.

தற்போது சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் மைல்ஸ் நிறுவனம் செல்ஃப் டிரைவ் திட்டத்தின் கீழ் அனைத்து பிராண்டு கார்களையும் வாடகைக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில், மைல்ஸ் நிறுவனத்துடன் எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது கார்களை குத்தகைக்கு விடும் திட்டத்தை மைல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

கடந்த ஆண்டு இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும், தற்போது கொரோனாவால் கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குத்தகை திட்டத்தின் மூலமாக டீலர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கவும், இருப்பை போக்குவதற்கும் முயற்சித்து வருகின்றன.

எம்ஜி குத்தகை திட்டத்தின் அடிப்படையில், 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை கார்களை குத்தகைக்கு எடுத்து ஓட்டுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மாத்திற்கு ரூ.40,000 முதல் இந்த குத்தகை திட்டம் ஆரம்பமாகிறது. மேலும், கார்கள் ஓடிய தூரத்தின் அடிப்படையில், கார்களுக்கான மாதக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

குத்தக்கை கட்டணத்தில் முன்பணம் செலுத்த வேண்டிய தேவை தவிர்க்கப்படுவதுடன், காருக்கான காப்பீட்டு கட்டணம், பராமரிப்பு ஆகியவை குத்தகை கட்டணத்திலேயே அடங்கிவிடும். அத்துடன், சாலை அவசர உதவித் திட்டமும் வழங்கப்படுகிறது. வரி சேமிப்பு வசதியும் இந்த குத்தகை திட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் இந்த கார் குத்தகை திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய மற்றும் பழைய கார்கள் இந்த குத்தகை திட்டத்தின் கீழ் பெறும் வாய்ப்புள்ளது. மேலும், கார்கள் முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னரே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் மட்டுமின்றி, கார் விற்பனையை அதிகரிக்க மாருதி சுஸுகி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் கார் குத்தகை திட்டம் மூலமாக இருப்பை தீர்ப்பதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








