வாடிக்கையாளர் நலனில் அக்கறையுடன் செயல்படும் எம்ஜி மோட்டார்!
இந்தியாவில் கார்களை டெலிவிரி கொடுப்பதிலும், டெஸ்ட் டிரைவ் செய்ய கொடுப்பதிலும் அதிக அக்கறையுடன் எம்ஜி மோட்டார் செயல்பட உள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு ஹெக்டர் எஸ்யூவியுடன் இந்திய வர்த்தகத்தை துவங்கியது. ஹெக்டர் எஸ்யூவிக்கு அதிக வரவேற்பு கிடைத்த நிலையில், இரண்டாவது மாடலாக இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை இந்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இந்த இரண்டு மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, கார்கள் விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக, மக்கள் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீடுகளில் முடங்கி உள்ளனர். பல நகரங்களில் ஊரடங்கும் அமலில் உள்ளது.

இந்த சூழலில், கார்களை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் கூட டெலிவிரி எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். வெளியே வந்தால் கொரோனா தொற்றும் வாய்ப்பு இருப்பதாக கருதி அவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்த சூழலை மனதில் வைத்து, எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய நடைமுறையை அமல்படுத்தி உள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் நலன் கருதி, சில முக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி, எம்ஜி கார்களை டெஸ்ட் டிரைவ் செய்ய விருப்பப்படும் வாடிக்கையாளர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்த கார்களை வீட்டிற்கே சென்று டெஸ்ட் டிரைவ் செய்ய கொடுக்கப்படும் என்று எம்ஜி தெரிவித்துள்ளது.

அதேபோன்று, முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு கார் டெலிலிரி தயாராக இருந்தால், அந்த கார் முற்றிலும் கிருமி நாசினி மூலமாக சுத்தப்படுத்தப்பட்டு வீட்டிற்கு சென்று டெலிவிரி வழங்கப்படும் என்று எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், தனது கார்களை ஆசையாய் புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில், வழங்குவதற்கு முயற்சி செய்து வருவதாக எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது.

கார்களை முன்பதிவு செய்வது, பணம் செலுத்துவது உள்ளிட்ட விஷயங்களை பெரும்பாலும் ஆன்லைனில் தொடர்ந்து செய்யவும் திட்டமிட்டுள்ளதாக எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது. டீலர்களிலும் பணியாளர்கள் பாதுகாப்பு கருதி, குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பணியாளர்கள் பணியில் உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








