ரூ.1,000 கோடியை கையில் வைத்துக் கொண்டு தவிக்கும் எம்ஜி மோட்டார்? - மத்திய அரசு மனசு வைக்கணும்!
இந்தியாவில் ரூ.1,000 கோடி வரை புதிதாக முதலீடு செய்வதற்கு எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய கார் மாடல்களுடன் இந்திய கார் சந்தையை கலக்கி வருகிறது. கடந்த ஆண்டு முதல் மாடலாக வந்த ஹெக்டர் அந்நிறுவனத்திற்கு பெரிய அடையாளத்தை இந்தியாவில் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. அதே உற்சாகத்துடன் இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, ஹெக்டர் ப்ளஸ் ஆகிய மாடல்களை களமிறக்கியது.

இந்த நிலையில், அடுத்த மாதம் க்ளோஸ்ட்டர் என்ற மிக பிரம்மாண்ட எஸ்யூவி மாடலை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த மாடல்களின் டிசைனும், தொழில்நுட்ப வசதிகளுக்கும் இந்தியாவில் பெரிய வாடிக்கையாளர் பட்டாளம் உருவாகிவிட்டது.

இந்த நிலையில், அடுத்து பல புதிய கார் மாடல்களுடன் இந்திய கார் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாறுவதற்கான திட்டத்துடன் காய்களை நகர்த்தி வருகிறது எம்ஜி மோட்டார். இதற்காக, ரூ.1,000 கோடியை முதலீடு செய்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய மாடல்களின் உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள கார் ஆலையில் விரிவாக்கத்திற்கும், விற்பனைப் பிரிவுக்கும் ரூ.1,000 கோடி வரை முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராஜீவ் சாபா எக்கனாமிக் டைம்ஸ் தளத்திடம் தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்தியாவில் ரூ.3,000 கோடியை எம்ஜி மோட்டார் நிறுவனம் செய்துள்ளது. ஆனால், எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய முதலீடு செய்வதில் சிக்கல் உள்ளது. அதாவது, எம்ஜி மோட்டார் நிறுவனத்தை சீனாவை சேர்ந்த செயிக் குழுமம்தான் முதலீடு செய்து கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.

தற்போது இந்தியா - சீனா இடையில் எல்லைப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான எளிதான வழிகளுக்கு கடிவாளம் போட்டுள்ளது மத்திய அரசு. மேலும், புதிய முதலீடு செய்வதற்கு மத்திய அரசின் சிறப்பு அனுமதியும் பெற வேண்டி இருக்கிறது.

எனவே, எம்ஜி மோட்டார் நிறுவனம் கையில் ரூ.1,000 கோடியை முதலீடு செய்ய தயாராக இருந்தாலும், அதற்கு மத்திய அரசு அனுமதி தந்தால் மட்டுமே விரிவாக்கம் செய்வதற்கான வழிவகை எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கு கிடைக்கும். இருப்பினும், புதிய முதலீட்டுக்கான மத்திய அரசின் அனுமதியை பெறுவதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் தீவிர முயற்சிகளை செய்து வருவதாக தெரிகிறது.

சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார் நிறுவனம் மஹாராஷ்டிராவில் உள்ள கார் ஆலையில் ரூ.7,000 கோடியை முதலீடு செய்வதாக அறிவித்தது. ஆனால், எல்லைப் பிரச்னை கிளம்பியதையடுத்து, அந்நிறுவனத்திற்கான முதலீட்டு திட்டம் தற்காலிகமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








