சீன நிறுவனங்கள் மீது கெடுபிடி அதிகரிப்பு... ஃபோக்ஸ்வேகன் ஆலையில் கார் உற்பத்தி செய்ய எம்ஜி முயற்சி!
ஃபோக்ஸ்வேகன் அல்லது மஹிந்திரா - ஃபோர்டு கார் ஆலைகளில் கார்களை உற்பத்தி செய்வதற்காக எம்ஜி மோட்டார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

லடாக் பிராந்திய எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததால், ஏற்பட்ட சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த பிரச்னையையடுத்து, சீன நிறுவனங்கள் மீது இந்திய கெடுபிடி காட்டி வருகிறது. இதனால், சீன நிறுவனங்கள் இந்தியாவில் புதிய முலீடுகளை செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் சீனாவை சேர்ந்த செயிக் வாகன உற்பத்தி குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களை எம்ஜி பிராண்டில் ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது செயிக் குழுமம்.

இந்த நிலையில், எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கார்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதையடுத்து, புதிய கார் மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்யும் முனைப்பில் எம்ஜி மோட்டார் ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில், புதிய மாடல்களுக்கு ஏதுவாக கார் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையை கையகப்படுத்தி, அதில்தான் கார் உற்பத்தி செய்து வருகிறது எம்ஜி மோட்டார். இந்த நிலையில், புதிய மாடல்களை உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக ரூ.1,000 கோடியை புதிதாக இந்தியாவில் முதலீடு செய்ய எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது.

ஆனால், மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, எம்ஜி மோட்டார் நிறுவனத்தை சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் கட்டுப்படுத்தி வருவதால், சிறப்பு அனுமதி பெற வேண்டி இருக்கிறது. இதனால், தற்போது மாற்று வழியை எம்ஜி மோட்டார் தேர்வு செய்துள்ளது.

அதாவது, ஃபோக்ஸ்வேகன் மற்றும் மஹிந்திரா - ஃபோர்டு கார் ஆலைகளில் தனது கார்களை உற்பத்தி செய்வது குறித்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதற்காக, இரு நிறுவனங்களிடமும் தனித்தனியாக எம்ஜி மோட்டார் பேச்சு நடத்தி வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் மற்றும் மஹிந்திரா - ஃபோர்டு கார் ஆலைகளில் உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இது வாய்ப்பாக இருக்கும் என்று கூறி எம்ஜி மோட்டார் பேச்சு நடத்தி வருவதாக தெரிகிறது. சீனாவை சேர்ந்த செயிக் குழுமத்துடன் ஃபோக்ஸ்வேகன் குழுமத்திற்கு ஏற்கனவே வலுவான உறவு உள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

எனவே, ஃபோக்ஸ்வேகன் இந்தியா ஆலையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது கார்களை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை இல்லை.


Click it and Unblock the Notifications








