சூப்பர் சிஎம்... ஆறு மாத சாலை வரி ரத்து... மகிழ்ச்சியின் உச்சத்தில் கால் டாக்சி டிரைவர்கள்..!
கோவிட் 19 வைரசால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு ஆறு மாதங்களுக்கான சாலை வரியை மஹராஷ்டிரா அரசு விலக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கோவிட் 19 வைரசின் தாக்கம் ஐந்து மாதங்களைக் கடந்தும் வீரியம் குறையாமல் பாதிப்புகளை ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றது. இதனால், தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்கள் மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காக பொதுமுடக்கத்தைத் தற்போதும் நீட்டித்த வண்ணம் இருக்கின்றன.

இதனால், மக்களின் வாழ்வாதரம் பெரிது பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசு போக்குவரத்து வாகனங்களின் இயக்கநிலை பூஜ்ஜிய எண்ணிக்கையில் இருப்பதால் பெரும்பாலானோர் தனியார் வாகனங்களையே நம்பியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதேசமயம், தனியார் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையும் மிகக் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மக்களின் வாழ்வாதரம் மேலும் நலிவடையத் தொடங்கியுள்ளது. மேலும், பொது முடக்கம், எரிபொருள் விலையுயர்வு மற்றும் சாலை வரி உள்ளிட்ட காரணங்களைக்காட்டி அதிக கட்டணத்தை வேறு வழியின்றி தனியார் வாகனங்கள் மக்களிடம் வசூலிக்க ஆரம்பித்துள்ளன.

இத்தைகைய சூழ்நிலை மற்றும் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஒரு மாநில அரசுகள் பொதுமுடக்கத்தைத் தளர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், குறிப்பிட்ட சில நடவடிக்கையின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியிலும் அவை ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில், மஹாராஷ்டிரா மாநில அரசு அம்மாநிலத்தில் வணிக ரீதியாக இயங்கும் வாகனங்களின் சாலை வரியை விலக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்திற்கான சாலை வரியை விலக்க உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

நேற்று முன்தினம் (ஆகஸ்டு 26) அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாக அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் அணில் பரப், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில செய்தி தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் அதிக நிதிப் பற்றாக்குறை சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அந்த மாநிலத்தில் 11.4 லட்சம் வாகனங்கள் வணிக பயன்பாட்டிற்காக பதிவு செய்யப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் வரி விலக்குமூலம் பயனடைய இருக்கின்றன.

இதில், சுற்றுலா டாக்சி, மினி பேருந்து மற்றும் பேருந்து, பள்ளி பேருந்து, தனியார் சேவை வாகனங்கள், டிரக்குகள், டேங்கர்கள் மற்றும் பிற சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கும். கொரோனா வைரஸ் தாக்கத்தால் வர்த்தக ரீதியாக இயங்கி வந்த மேற்கூறிய வாகனங்களும் பெரியளவில் பாதிக்கப்பட்டன. தற்போதும் அவற்றின் மீதான பாதிப்பு நீடித்த வண்ணமே இருக்கின்றது.

எனவேதான் முன்னதாக குஜராத், ராஜஸ்தான், உத்தர்காண்ட் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் சாலை வரி விலக்கை அறிவித்தன. இதைத் தொடர்ந்தே தற்போது மஹாராஷ்டிரா அரசும் வரி விலக்கு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கங்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தநிலையில் இந்த அதிரடி முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. முன்பைப் போன்று மக்கள் போக்குவரத்தைப் பெரிதாக பயன்படுத்தாத காரணத்தால் வர்த்தக ரீதியாக இயங்கும் வாகனங்கள் மற்றும் அதைச் சார்ந்து இயங்கும் தொழிலாளர்களின் பொருளாதார நிலை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் இருந்து ஆறு மாதங்களுக்கான சாலை வரி விலக்கு அளித்திருப்பது லேசாக கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், வாடகை மற்றும் வர்த்தக வாகன உரிமையாளர்கள் தற்போது மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








