நம்பர் பிளேட் விஷயத்தில் கெடுபிடி காட்டும் மத்திய அரசு! விரைவில் அதிரடி மாற்றங்களுக்கு தயாராகுங்கள்!
நம்பர் பிளேட் விஷயத்தில் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இந்தியாவில் வாகனம் சார்ந்த குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. முக்கியமாக திருடப்படும் வாகனங்களைக் கொண்டே சமூக விரோதிகள் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருட்டு, கொள்ளை போன்ற தீய செயல்களுக்கே அவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

இதனைத் தவிர்க்கும் விதமாக மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், வாகனங்களின் பதிவெண் சார்ந்த விதிகளில் புதிதாக 11 விதிகளைச் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் சேர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த மோட்டாராய்ட்ஸ் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சாலை போக்குவரத்து அமைச்சகம் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிப்பானது, தற்காலிக எண் தகடுகளைக் கொண்டிருக்கும் வாகனங்கள் மற்றும் டீலர்கள் (விநியோகஸ்தர்கள்) வசம் இருக்கும் வாகனங்களுக்கும் பொருந்தும் என தெரிகின்றது.

மேலும், இந்த புதிய விதியின்படி, ஏற்கனவே இருக்கும் ஒரு சில நடைமுறைகள் கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதாவது, எழுத்தின் உருவம் மற்றும் அளவு ஆகியவற்றை அரசு வழிவகுத்ததை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், நம்பர் பிளேட்டுகளில் நிலவும் குழப்பத்தைப் போக்கும் விதமாக எண்களின் பின் புறத்தில் நிறம் சேர்க்கப்பட இருக்கின்றது. இந்த நிறம், எலெக்ட்ரிக், ப்யூவல் மற்றும் சிஎன்ஜி ஆகிய வாகனங்களில் வேறுபட்டு காணப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேசமயம் இந்த புதிய விதியால், தற்காலிமாக ஒட்டப்படும் பேப்பர் நம்பர் பிளேட்கூட விதியை மீறும் செயலாக மாறியுள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதளை மத்திய மோட்டார் வாகன விதிகள் வழங்கியுள்ளது. எனவே, அரசு வழிகாட்டியுள்ள உலோக தகட்டால் ஆன நம்பர் பிளேட் மட்டுமே வாகனங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

அதில் இருக்கும் எழுத்துகள் ஆங்கில மொழியில் அரபிக் எண்ணெழுத்துக்களின் வடிவத்தைக் கொண்டிருக்க வேண்டும். இதில், எந்தவொரு மாநிலத்தின் மொழியும் இடம்பெற்றிருக்கக் கூடாது. அத்துடன், எழுத்துகளின் அளவும் சிறியதாக இருக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இதை மீறும்பட்சத்தில் இதையும் விதிமீறலாகவே இனி கருதப்படும்.

அதேசமயம், மேற்கூறிய விதிகள் விஐபி எண்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏலம் மூலம் மாநில அரசுகள் விற்பனைச் செய்த பேன்சி அடங்கிய பதிவெண்களுக்கும் இந்த விதிகள் அடங்கும். இந்த புதிய விதி மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பதிவெண் பிளேட்டிலும் மாற்றம் நிகழ இருக்கின்றது.

அதாவது, எலெக்ட்ரிக் வாகனங்களின் நம்பர் பிளேட் பச்சை நிறத்திலும், அதில் இருக்கும் எழுத்து மற்றும் எண் ஆகியவை மஞ்சள் நிறத்தில் நிறுவப்பட இருக்கின்றன.
டீலர்களிடம் இருக்கும் வாகனங்களுக்கு எந்த மாதிரியான நம்பர் பிளேட்டைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் அதில் என்ன மாதிரியான எழுத்துகள் இருக்க வேண்டும் என்பதைக்கூட மத்திய மோட்டார் வாகன விதிகள் வகுத்துக் கொடுத்துள்ளது.

இதன்படி, வாகனத்தில் இருக்கும் பதிவெண் 65 மிமீ உயரம், 10 மிமீ தடிமன் மற்றும் 10 மிமீ ஸ்பேஸ் உள்ளிட்டவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த விதி பைக் மற்றும் ஆட்டோக்களுக்கு பொருந்தாது.
வாகன திருட்டு மற்றும் வாகனம் சார்ந்து அரங்கேறும் குற்றச் சம்பவங்களைக் களையெடுக்கும் விதமாக இந்த புதிய நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

அதாவது, மேற்கூறிய சீர்த்திருத்தங்கள் அனைத்தும் தற்போது பொருத்தப்பட்டு வரும் ஆட்டோமேட்டிக் கேமிராவின் கண்களில் எளிதில் சிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, போலீஸாரின் கண்களில் இருந்து சமூக விரோதிகள் தப்பினாலும், இந்த கேமிராவின் கண்களில் இருந்து தப்ப முடியாது. இதற்காகதான், வாகன பதிவெண் முதல் நம்பர் பிளேட் வரை புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








