சூப்பர்... உலக அரங்கில் இந்தியாவின் மானத்தை காப்பாற்றிய டாடா... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க...
உலக அரங்கில் இந்தியாவின் மானத்தை டாடா காப்பாற்றியுள்ளது. இதுகுறித்து பெருமைப்பட வைக்கும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் நிறுவனங்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு மிகவும் மோசமான ஒரு ஆண்டாக அமைந்தது. ஏனெனில் கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் கார்களின் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்தியாவிலோ நிலைமை இன்னும் படுமோசமாக இருந்தது. பொருளாதார மந்தநிலை, பிஎஸ்-6 விதிகள் உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஆண்டு இந்தியாவில் கார்களின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றது.

இதனால் நாட்டின் முன்னணி கார் நிறுவனங்கள் அனைத்தும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. சரி, 2020ம் ஆண்டில் நிலைமை கொஞ்சம் மேம்பட்டு விடும் என்ற நம்பிக்கையுடன் கார் நிறுவனங்கள் காத்திருந்தன. ஆனால் சமீப கால அளவில், நடப்பாண்டுதான் கார் நிறுவனங்களுக்கு பலத்த அடியை கொடுத்துள்ளது. கொரோனா என்ற உயிர்கொல்லி வைரஸே இதற்கு காரணம்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இது கொத்து கொத்தாக மனித உயிர்களை காவு வாங்கி வருவதுடன், உலக பொருளாதாரத்தையும் உலுக்கி எடுத்துள்ளது. குறிப்பாக கார் நிறுவனங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பிரச்னையால் பண புழக்கம் குறைந்ததால், கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் மந்தநிலை நிலவுகிறது.

இப்படிப்பட்ட இக்கட்டான ஒரு சூழலில், உலகில் மதிப்பு வாய்ந்த கார் பிராண்டுகளின் (Most Valuable Car Brands) பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், டொயோட்டா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி டெஸ்லா முதலிடத்தை பிடித்துள்ளது. டாப்-25 பிராண்டுகளின் பட்டியலில், ஒரே ஒரு இந்திய நிறுவனம் மட்டுமே இடம்பிடித்துள்ளது. அது டாடா. வேறு எந்த இந்திய நிறுவனமும் டாப்-25 பட்டியலில் இல்லை.

2020ம் ஆண்டின் ஜூன் மாத நிலவரப்படி, உலகிலேயே மதிப்பு வாய்ந்த கார் பிராண்டு என்னும் பெருமையை, அமெரிக்காவின் டெஸ்லா பெற்றுள்ளது. அதிநவீன எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில், நிபுணத்துவம் பெற்று விளங்கும் டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு 190.12 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் டொயோட்டா உள்ளது.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் மதிப்பு 182.27 பில்லியன் அமெரிக்க டாலர்கள். மூன்றாவது இடத்தை ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பிடித்துள்ளது. அதன் மதிப்பு 81.72 பில்லியன் அமெரிக்க டாலர்கள். முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள டெஸ்லா, டொயோட்டா ஆகிய நிறுவனங்களுக்கும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கும் பெரும் வித்தியாசம் நிலவுகிறது.

நான்காவது இடத்தை ஹோண்டா நிறுவனம் பிடித்துள்ளது. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் மதிப்பு 48.42 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 5வது இடத்தை டெய்ம்லர் பெற்றுள்ளது. இது ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஆகும். டெய்ம்லர் நிறுவனத்தின் மதிப்பு 45.18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.

இத்தாலியை சேர்ந்த ஃபெராரி நிறுவனம் 6வது இடத்தை பிடித்துள்ளது. ஃபெராரி நிறுவனத்தின் மதிப்பு 43.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 7வது இடத்தை பிஎம்டபிள்யூ பெற்றுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த இந்த நிறுவனத்தின் மதிப்பு 41.87 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதற்கு அடுத்த 8வது இடத்தில், ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது.

சுருக்கமாக ஜிஎம் என குறிப்பிடப்படும் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடைய மதிப்பு 41.14 பில்லியன் அமெரிக்க டாலர்கள். பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கும், அமெரிக்காவை சேர்ந்த ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் சிறிய வித்தியாசம்தான் காணப்படுகிறது. சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் 29.99 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் 9வது இடத்தை பிடித்துள்ளது.

10வது இடத்தை அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் மதிப்பு 27.08 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகில் மதிப்பு வாய்ந்த கார் பிராண்டுகளின் டாப்-25 பட்டியலில் இருக்கும் ஒரே ஒரு இந்திய நிறுவனம் டாடா மோட்டார்ஸ்தான். 23வது இடத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 4.79 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

டாடா மோட்டார்ஸை தவிர வேறு எந்த இந்திய நிறுவனமும் டாப்-25 பட்டியலில் இடம்பெறவில்லை. ஜப்பான், சீனா, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் கார் நிறுவனங்கள்தான் இந்த பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. தற்போது கார் விற்பனை சரிவடைந்திருந்தாலும், கொரோனா அச்சம் காரணமாக வரும் காலங்களில் கார் விற்பனை மீண்டும் உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பஸ், ரயில், ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே சொந்த கார்களில் பயணம் செய்வதை மக்கள் தற்போது பாதுகாப்பானதாக கருத தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக கார் விற்பனை அதிகரிக்கலாம் என்பதால், கார் நிறுவனங்கள் மகிழ்ச்சியில் உள்ளன.


Click it and Unblock the Notifications








