வாகன உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கு ஆறுதல் கொடுத்த ஐஆர்டிஏ!
கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலை குலைந்து போயுள்ள வாகன நிறுவனங்களுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும் ஆறுதல் தரும் செய்தியை காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA) வழங்கி இருக்கிறது.

கொரோனா பாதிப்பால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சுருண்டு கிடக்கின்றன. தற்போதைய சூழலில் வர்த்தகம் எப்போது சீராகும், பொருளாதார இழப்புகளை எப்படி சரி செய்வது என்ற குழப்பத்தில் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும், டீலர்களும் உள்ளனர்.

இந்த நிலையில், ஆண்டுதோறும் நிதி ஆண்டு துவங்கும்போது வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த நிதி ஆண்டுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை உயர்த்துவதற்கு ஐஆர்டிஏ அமைப்பு திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பை சுட்டிக் காட்டி, 2020-21ம் நிதி ஆண்டில் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று சியாம் அமைப்பு ஐஆர்டிஏ அமைப்பிடம் வேண்டுகோள் வைத்திருந்தது.

இதனை பரிசீலித்த ஐஆர்டிஏ அமைப்பு, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை உயர்த்தப்பட மாட்டாது என்று சியாம் அமைப்புக்கு உறுதி அளித்துள்ளது. அனைத்து வகை வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் இந்த நிதி ஆண்டில் உயர்த்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது உள்ள பிரிமீயம் தொகையே தக்க வைக்கப்படும்.

இதனால், வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும், வாகன உரிமையாளர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இல்லையெனில், வாகன உரிமையாளர் தலையில் இந்த கூடுதல் சுமை விழும். அத்துடன், புதிய வாகனங்கள் வாங்குவோரும் தள்ளிப்போடும் வாய்ப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் உயர்த்தப்பட்டால், அது பெரும் சுமையாக, குறிப்பாக, புதிய வாகனங்கள் வாங்குவோருக்கு அதிக சுமையை ஏற்படுத்தும். இந்த நிலையில், இந்த முடிவு வரவேற்கப்படுவதாகவும், ஐஆர்டிஏவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சியாம் அமைப்பு தெரிவித்துள்ளது. இது நிச்சயம் வாகன உரிமையாளர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








