பதிவு செய்யப்படாமல் அலைக்கழிக்கப்பட்ட பல-வண்ண அம்பாசடார்... அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்...
பல வண்ண நிறங்களில் கார்களை பெயிண்ட் செய்வதும், அவற்றை பதிவு செய்வதும் சட்ட விரோதமான செயல் அல்ல என்று பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இதுகுறித்து இந்தியன் எக்ஸ்ப்ரஸ் செய்தி வெளியிட்டுள்ள கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் தகுந்த வழிமுறைகள் இல்லாமல் வாகனங்களை மாடிஃபைடு மற்றும் கஸ்டமைஸ்ட் செய்வது சட்ட விரோதமான செயலாக கருதப்படுகிறது. இதனால் இவ்வாறான வாகனங்கள் ஆர்டிஒ அலுவலங்களில் பதிவு செய்ய இயலாமல் போவதால் அவை போக்குவரத்து போலீசாரின் சோதனையில் சிக்கும்போது பறிமுதல் செய்யப்படும் அளவிற்கு உட்படுகின்றன.

இத்தகைய பறிமுதல் சம்பவங்களை நாம் கேட்டிருப்போம். கண்டிருப்போம். இந்த சட்ட விரோத கஸ்டமைஸ்ட் மாற்றங்களில் வண்ண நிறங்களில் தனது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் பெயிண்ட் செய்வதும் ஒன்றாக தான் இருந்தது. ஏனெனில் சில பெயிண்ட் அமைப்புகள் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளின் பார்வையை சீர் குலைக்கலாம் என்ற கருத்து உள்ளது.

இதனால் தான் பஞ்சாப்பை சேர்ந்த ஆர்டிஒ ஆய்வாளர் ஒருவர் பல நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்ட சண்டிகரை சேர்ந்த ஹிந்துஸ்தான் அம்பாசடார் காரை பதிவு செய்ய மறுத்துள்ளார். இந்த அம்பாசடார் காரின் உண்மையான நிறம் வெள்ளை ஆகும்.

ஆர்டிஒ ஆய்வாளர் மறுக்கவே காரின் உரிமையாளர் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கார்களை பல நிறங்களில் பெயிண்ட் செய்வது சட்டப்பூர்வமான செயல் தான் என்றும், இந்த காரை ஆர்டிஒ அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த தீர்ப்புக்கு மற்றொரு காரணம், காரின் உண்மையான நிறம் வெளியே தெரியும்படி இருப்பதே ஆகும். இந்த ஹிந்துஸ்தான் அம்பாசடார் காரில் இந்த கலை வேலையை மெக்ஸிகனை சேர்ந்த கலைஞர் செங்கோ என்பவர் மேற்கொண்டுள்ளார்.

இதற்கு மேலும் மனுதாரர் அலைக்கழிக்கப்படக்கூடாது என்றும், சண்டிகர் நிர்வாகம் இந்த பல-வண்ண ஹிந்துஸ்தான் அம்பாசடார் காரை பதிவு செய்ய முன்வர வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நீதிபதி ஜெய்ஸ்ரீ தாகூர் கூறியாவது, காரின் அடிப்படை வெள்ளை நிறத்தின் மீது தான் கலை வேலை நடைபெற்றுள்ளது. இது தர்க்கத்தை மீறுவதாக அமையவில்லை.

இதனை எவரொருவரும் எளிதில் புரிந்து கொள்வார்கள். ஆய்வாளர் தன்னிச்சையாகவும், முற்றிலும் விசித்திரமாகவும் நடந்து, மனுதாரருக்கு தேவையற்ற துன்புறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். வெள்ளை நிறத்தில் இருந்து வேறு நிறத்திற்கு கார் மாற்றப்பட்டிருந்தாலோ அல்லது மனுதாரர் காரின் நிறம் குறித்து தவறான தகவலை குறிப்பிட்டிருந்தாலோ மட்டுமே பதிவு செய்ய மறுத்திருக்க முடியும்.

ஆனால் மனுதாரர் கார் வெள்ளை நிறத்தில் தான் உள்ளது போன்ற எந்த தவறான விபரத்தையும் வாகன பதிவு விண்ணப்பத்தில் நிரப்பவில்லை. கலை வேலை அனைத்தும் காரை வண்ண நிறமாக மாற்றுவதற்கு தான் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர்த்து காரின் தோற்றத்தை எந்த வகையிலும் மாற்றவில்லை. சட்டத்தின் பிரிவு 52-ன் படி இது அனுமதிக்கப்படாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பஞ்சாப் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு முரணாக இந்தியாவில் மற்ற எந்தவொரு உயர்நீதிமன்றத்தின் பெரிய கிளையோ அல்லது உச்சநீதிமன்றமோ தீர்ப்பை வழங்கும் வரை தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நாடு முழுவதும் அமலில் இருக்கும். இதனால் காரின் உண்மையான நிறத்தை மாற்றாமல் அதன்மீது மற்ற நிறங்களை உரிமையாளர்கள் சேர்க்கலாம்.


Click it and Unblock the Notifications








