பெட்ரோல் விலை விண்ணைத் தொட்டாலும் கவலை இல்லை... இந்த வேன் அவ்ளோ ஸ்பெஷலானது... ஏன் தெரியுமா?
மாருதி ஆம்னி வேன் ஒன்று சோலார் வாகனமாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்காலம்.

அண்மைக் காலங்களாக பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் கொள்முதல் விலைக் குறைந்து காணப்பட்டாலும் இந்தியாவில் எரிபொருளின் விலை ஏறு முகத்திலேயேக் காட்சியளிக்கின்றது. இது, வாகன ஓட்டிகள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

ஆனால், இங்கு ஓர் வேன் டிரைவர் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொட்டாளும் எனக்கு கவலையில்லை என கூறி வருகின்றார். மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த திலிப் சித்ரே, இவரே பெட்ரோல்-டீசல் விலையுயர்வைக் கண்டு துளியளவும் கவலைக் கொள்ளாமல் பழைய மாருதி ஆம்னி வேன் ஒன்றைப் பயன்படுத்தி வருகின்றார்.

68 வயதான இவர், தானே தன்னுடைய வேனை சோலாரால் இயங்கும் வேனாக மாற்றியிருக்கின்றார். அதாவது, மாருதி ஆம்னி வேனை மின்சாரத்தால் இயங்கும் வாகனமாக மாற்றி அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த வேனிற்கான பேட்டரியை சார்ஜ் செய்யவே சோலார் பேனல்களை அவர் பயன்படுத்தி வருகின்றார்.

இதனை வேனின் மேற்கூரைப் பகுதியில் அவர் நிறுவியிருக்கின்றார். மாற்றம் செய்யப்பட்ட இந்த வேனைக் கொண்டு அவர் இதுவரை 4,500 கிலோ மீட்டர் வரை பயணித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த பயணத்தின்போது ஒரு முறைக் கூட அவர் எந்தவிதமான சிக்கலைச் சந்திக்கவில்லை என பெருமையுடன் கூறுகின்றார்.

காரில் மின்சாரத்தைச் சேமித்து வைக்க லித்தியம் அயன் பேட்டரிகளைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு ஆம்னி வேனை முழுமையான சோலார் வாகனமாக மாற்றியமைப்பதற்கு மிகக் குறைந்த காலங்களே தனக்கு தேவைப்பட்டதாக திலிப் சித்ரே கூறியிருக்கின்றார்.

ஏற்கனவே சிறிய ரக சோலார் கருவிகளை உருவாக்கியதால் இவருக்கு ஆம்னி வேனை சோலார் வாகனமாக மாற்றுவதில் எந்த சிரமும் நேரவில்லை என தெரிவித்திருக்கின்றார். முன்னதாக இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடுவதைத் தடுக்கும் கருவியை இவர் வடிவமைத்திருந்தார்.

இதைத் தொடர்ந்தே தற்போது சோலார் திறனால் இயங்கக்கூடியவற்றை தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகின்றார். தற்போது சோலார் வேனை உருவாக்கியதைப் போல் முன்பு ஆட்டோ ஒன்றையும் திலிப் வடிவமைத்திருக்கின்றார்.

ஆனால், இதற்கு அரசு சார்பில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. பல முறை முயற்சி மேற்கொண்டும் அதற்கான எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. இருப்பினும், மனம் தளராத திலிப் தன்னுடைய அடுத்த தயாரிப்புகளை வடிவமைத்த வண்ணம் இருக்கின்றார்.
குறிப்பு: 5 முதல் 8 வரையிலான படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








