புதிய சிட்டியுடன் பழைய மாடலையும் தொடர்ந்து விற்பனை செய்ய ஹோண்டா திட்டம்?
இந்தியாவில் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் செய்யப்பட்டாலும், பழைய மாடலையும் தொடர்ந்து விற்பனையில் வைப்பதற்கு ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் மிட்சைஸ் கார் மார்க்கெட்டுக்கு மதிப்பை ஏற்படுத்தி கொடுத்த மாடல் ஹோண்டா சிட்டி. இந்த காருக்கான மதிப்பு வாடிக்கையாளர் மிகப்பெரிய அளவில் உள்ளது. அந்தஸ்தின் விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக அவ்வப்போது புதிய தலைமுறை மாடல்களாக சிட்டி கார் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் நான்காம் தலைமுறை சிட்டி மாடல் விற்பனையில் உள்ளது. இதனிடையே, கடந்த ஆண்டு பிற்பாதியில் தாய்லாந்தில் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய தலைமுறை சிட்டி கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

தற்போது விற்பனையில் உள்ள நான்காம் தலைமுறை மாடலில் இருந்து டிசைன், வசதிகள், எஞ்சின் அனைத்துமே முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், வடிவத்திலும் பெரிதாக இருப்பதால், இடவசதியும் சிறப்பாக இருக்கும் என்று தெரிகிறது.

பொதுவாக புதிய தலைமுறை மாடல் வரும்போது பழைய மாடலானது நீக்கப்பட்டுவிடும். ஆனால், ஹோண்டா நிறுவனம் புதிய சிட்டி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும், பழைய மாடலையும் தொடர்ந்து விற்பனையில் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

அதாவது, புதிய தலைமுறை மாடல் விலையிலும், வசதிகளும் முற்றிலும் புதிய மாடலாக வருகிறது. எனவே, வெவ்வேறு பட்ஜெட் கொண்ட வாடிக்கையாளர்களை மனதில் வைத்து இரண்டு மாடல்களையும் விற்பனை செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளதாம். புதிய சிட்டி பெயருடன் கூடுதல் அடைமொழி அல்லது பெயருடன் விற்பனைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் கடும் போட்டியை சமாளிக்க உதவும் என்று கருதுகிறது. தற்போது மாருதி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்கள் கடும் போட்டியை சிட்டி காருக்கு தந்து வருகின்றன. மறுபுறத்தில் ஸ்கோடா ரேபிட், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார்களும் சிறப்பான தேர்வாக இருக்கின்றன.

எனவே, பட்ஜெட் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு தேர்வுகளையும் வழங்குவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளதாம். புதிய ஹோண்டா சிட்டி காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், இரட்டை வண்ண இன்டீரியர், 8 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

புதிய ஹோண்டா சிட்டி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். இந்த எஞ்சின் 119 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். வெளிநாட்டில் உள்ள டர்போ பெட்ரோல் மாடல் இந்தியாவிலும் கொடுக்கப்படாது என்றே நம்பப்படுகிறது.

தற்போது இந்தியாவில் உள்ள நான்காம் தலைமுறை மாடலானது ரூ.11.3 லட்சம் முதல் ரூ.17.3 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய தலைமுறை மாடலின் விலை ரூ.40,000 வரை அதிகமாக நிர்ணயிக்கப்படும். அதேநேரத்தில், சந்தைப் போட்டியை சமாளிக்க பழைய மாடலின் விலையை குறைக்கும் எண்ணமும் ஹோண்டாவிடம் உள்ளதாம்.


Click it and Unblock the Notifications








