புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி அறிமுக விபரம்!
புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடுத்தர வகை எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த 7 சீட்டர் மாடலாக வாடிக்கையாளர் தேர்வில் முதன்மையாக உள்ளது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி. மிரட்டலான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின், அதிக வசதிகள் மற்றும் சரியான விலை போன்ற காரணங்களால், விற்பனைக்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும் இந்த எஸ்யூவிக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் இருந்து வருகிறது.

இந்த நிலையில், சந்தையில் புதிய மாடல்களின் வருகையால் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நெருக்கடி அதிகரித்து உள்ளது. இதனால், புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியை உருவாக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது. மேலும், புரோட்டோடைப் மாடல்கள் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் அறிமுகம் குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த ஃபன்ஸ்டெர் கான்செப்ட் அடிப்படையிலான பல டிசைன் தாத்பரியங்கள் இந்த புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் எதிர்பார்க்கலாம்.

அதேபோன்று, சாங்யாங் கொரண்டு எஸ்யூவியின் தோற்றத்தின் பிரதிபலிப்பும் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் இருக்கும் என்று ஸ்பை படங்கள் மூலமாக யூகிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியும் மோனோகாக் சேஸீயில்தான் கட்டமைக்கப்பட்டு இருக்கும். இது உலகளாவிய அளவில் விற்பனைக்கு செல்லும் என்பதால், அதற்கு தக்கவாறு, டிசைன் மற்றும் கட்டமைப்பு தரம் இருக்கும்.

புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. பெட்ரோல் மாடலில் இடம்பெற இருக்கும் மஹிந்திராவின் புதிய எம் ஸ்டாலியன் டர்போ எஞ்சின் அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

டீசல் மாடலில் வழங்கப்பட இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 185 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். சில வேரியண்ட்டுகளில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் அடிப்படையில் ஃபோர்டு நிறுபவனத்தின் சி ரக எஸ்யூவி மாடலும் உருவாக்கப்பட இருக்கிறது. ஃபோர்டு நிறுவனத்தின் மாடலானது 5 சீட்டர் மாடலாக இருக்கும் வாய்ப்புள்ளது. அதாவது, எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

அதேநேரத்தில், புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது விரைவில் வரும் டாடா கிராவிட்டாஸ், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் ஆகிய 7 சீட்டர் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








