புதிய ஹோண்டா சிட்டி கார் திட்டமிட்டபடி அறிமுகமாகிறது... இப்ப சந்தோஷம்தானே!
இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் தனி முத்திரை பதித்துள்ள மாடல் ஹோண்டா சிட்டி கார். சந்தைப் போட்டி மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்ட இந்த மாடல் கடந்த ஆண்டு இறுதியில் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

வடிவமைப்பு, வசதிகள், எஞ்சின் என அனைத்திலும் முற்றிலும் வேறுபட்ட மாடலாக மாறி இருக்கும் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இந்தியர்கள் மத்தியிலும் பேராவலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக, புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் வருகையில் தாமதம் ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால், புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் வருகையில் எந்த தாமதமும் ஏற்படாது; ஏற்கனவே திட்டமிட்டபடி மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தேசிய ஊரடங்கு முடிந்த உடன் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹோண்டா சிட்டி கார் வடிவத்தில் பெரிய மாடலாக மாறி இருப்பதுடன், தோற்றத்திலும் முற்றிலும் புதிய மாடலாக மாறி இருக்கிறது. அதாவது, புதிய ஹோண்டா சிவிக் காரின் டிசைன் அம்சங்கள் ஏராளமாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட்டுகள், புதிய அலாய் வீல்கள் என ஏராளமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் இடம்பெற்றிருக்கும். முதல்முறையாக இந்த காரில் அலெக்ஸா ரிமோட் வாய்ஸ் அசிஸ்டென்ஸ் வசதி வழங்கப்பட உள்ளது. மேலும், ஹோண்டா கனெக்ட் செயலியும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த காரில் புதிய செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஜி மீட்டர், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் பட்டன்கள், க்ரூஸ் கன்ட்ரோல், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் என பல நவீன தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

ஐந்தாம் தலைமுறை மாடலாக வரும் புதிய ஹோண்டா சிட்டி காரில் 1.5 லிட்டர் டிஓஎச்சி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். பெட்ரோல் எஞ்சின் 120 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும், டீசல் எஞ்சின் 100 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஏராளமான வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் வந்தாலும், தற்போது உள்ள மாடலும் தனிநபர் வாடிக்கையாளர் மார்க்கெட்டை குறிவைத்து விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. விலை அடிப்படையில் வெவ்வேறு பட்ஜெட் வாடிக்கையாளர்களை குறிவைத்து நிலைநிறுத்தப்பட உள்ளதாம். மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








