ஜீப் ரேங்லர் ரூபிகன் ஆஃப்ரோடு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!
ஜீப் ரேங்லர் ரூபிகன் ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் விலை உயர்ந்த ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் ஜீப் ரேங்லர் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சாதாரண ரேங்லர் எஸ்யூவியைவிட அதிக சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட ரேங்லர் ரூபிகன் மாடல் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

டிசைனில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. அதேநேரத்தில், தொழில்நுட்ப அளவில் பல மாற்றங்களை கண்டுள்ளது. இந்த ரேங்லர் ரூபிகன் மாடலானது அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. இதனால், கரடுமுரடான சாலைகளில் எளிதாக செல்வதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறது. மேடு, பள்ளங்களில் எளிதாக ஏறி, இறங்கும் வகையில் தரை இடைவெளி மற்றும் தகவமைப்புகளை பெற்றிருக்கிறது.

இந்த மாடலில் ஜீப் ராக்டிராக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஃபுல் டைம் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், எலெக்ட்ரானிக் லாக்கிங் டிஃபரன்ஷியல், லோ ரேஞ்ச் கியர் ரேஷியோ, ஃபுல் டைம் டார்க் திறன் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு ஆஃப்ரோடு தொழில்நுட்பங்களை பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவியில் விசேஷ ஆஃப்ரோடு டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சாதாரண ரேங்லர் மாடலில் இருக்கும் அதே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்தான் இந்த ரூபிகன் மாடலிலும் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 268 எச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது.

இந்த புதிய ஆஃப்ரோடு எஸ்யூவியில் 4 ஏர்பேக்குகள், முன்புற, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ட்ரெயிலர் ஸ்வே கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ரோல் மிட்டிகேஷன், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் என ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன.

புதிய ரேங்லர் ரூபிகன் எஸ்யூவியில் 8.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஜீப் நிறுவனத்தின் யுகனெக்ட் செயலியுடன் இயங்கும். இந்த சாதனமானது ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளையும் சப்போர்ட் செய்யும்.

புதிய ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவியில் வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், நேவிகேஷன் வசதி மற்றும் பொழுது போக்கு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவியின் 5 டோர் மாடல் இறக்குமதி செய்து இந்தியாவில் டெலிவிரி கொடுக்கப்பட இருக்கிறது. ரூ.68.74 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வரும் மார்ச் 15ந் தேதி முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








