ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்!
மிக சரியான விலையில் புதிய லோடு ஆட்டோரிக்ஷாவை மஹிந்திரா நிறுவனம் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய மின்சார லோடு ஆட்டோவின் ரேஞ்ச், வாரண்டி உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமாக மஹிந்திரா விளங்குகிறது. இந்த நிலையில், மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு கூடி வருவதுடன், மக்கள் தொகை அதிகம் கொண்ட பெரு நகரங்களில் மின்சார வாகனங்களுக்கான தேவை கணிசமாக உயர்ந்து வருவதை மனதில் வைத்து, அதற்கு தக்க மின்சார வாகன மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில், ட்ரியோ ஸோர் என்ற மூன்றுசக்கர எலெக்ட்ரிக் லோடு ஆட்டோவை இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய மின்சார லோடு ஆட்டோ சரக்கு வாகனத்திற்கு ரூ.2.73 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய மஹிந்திரா ட்ரியோ ஸோர் எலெக்ட்ரிக் லோடு ஆட்டோவானது மூன்று விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். பிக்கப் டிரக் வகையிலும், பக்கவாட்டில் தடுப்புகள் இல்லாத ஃப்ளாட் பெட் வகையிலும், பொருட்களை டெலிவிரி வழங்குவதற்கான முழுமையாக கூண்டு அமைக்கப்பட்ட நிலையிலும் கிடைக்கும்.

சிறிய வணிக நிறுவனங்கள் பயன்பாடு, நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கான பயன்பாடுகளுக்கு உகந்ததாக இருக்கும். இந்த மாடலானது வரும் டிசம்பர் மாதம் முதல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மஹிந்திராவின் சிறிய வர்த்தக வாகன விற்பனை டீலர்களில் கிடைக்கும். இந்த வாகனத்தில் 550 கிலோ வரை பாரத்தை ஏற்றும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மஹிந்திரா ட்ரியோ ஸோர் எலெக்ட்ரிக் லோடு ஆட்டோவில் ஐபி76 தரத்திற்கு இணையான மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டார் 10.7 எச்பி பவரையும், 42 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்த எலெக்ட்ரிக் லோடு ஆட்டோவில் உள்ள பேட்டரியை 15 Amp சாக்கெட் மூலமாக எளிதாக சார்ஜ் செய்ய முடியும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 125 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். டீசல் லோடு ஆட்டோக்களைவிட வருடத்திற்கு ரூ.60,000 வரை சேமிப்பை உரிமையாளர்கள் பெற முடியும்.

இந்த எலெக்ட்ரிக் லோடு ஆட்டோவிற்கு வழங்கப்படும் NEMO என்ற பிரத்யேக கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் மூலமாக பேட்டரியில் உள்ள சார்ஜ் மூலமாக எவ்வளவு தூரம் பயணிக்க முடியும், வேகம், இருப்பிடம் உள்ளிட்ட பல தகவல்களை பெற முடியும். இந்த வாகனத்தில் ஜிபிஎஸ் வசதி, டிரைவிங் மோடுகள் ஆகியவை இருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிக சவுகர்யமாக இருக்கும்.

புதிய மஹிந்திரா ட்ரியோ ஸோர் எலெக்ட்ரிக் லோடு ஆட்டோவிலேயே ஆன்போர்டு சார்ஜர் ஒன்றும் கொடக்கப்படும். இந்த வாகனத்திற்கு 3 ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது. இதன் பேட்டரிக்கு 1.50 லட்சம் கிமீ வரை வாரண்டி கொடுக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 140க்கும் மேற்பட்ட சர்வீஸ் மையங்கள் மூலமாக சர்வீஸ் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








