முற்றிலும் வேறுபட்ட புதிய ஸ்கோடா ரேபிட் கார்... அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்
முற்றிலும் வேறுபட்ட டிசைனில் வரும் புதிய ஸ்கோடா ரேபிட் கார் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் ஸ்கோடா ரேபிட் காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. அருமையான டிசைன், தரமான கட்டுமானம், சிறந்த எஞ்சின் தேர்வுகளுடன் இந்த கார் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றிருக்கிறது. எனினும், ஸ்கோடாவின் விற்பனைக்கு பிந்தைய சேவை தரம் சொதப்பி வந்த நிலையில், தற்போது அந்த பிரச்னைகள் களையப்பட்டு வாடிக்கையாளர்கள் மெச்சத் தக்க வகையில் மாறி வருகிறது.

மேலும், அண்மையில் பிஎஸ்6 தரத்திற்கு இணையான 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா ரேபிட் கார் மிக சவாலான விலையில் சந்தைக்கு வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சூழலில், மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி, புதிய ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியாஸ் போன்ற ஜாம்பவான் மாடல்களுடன் கடுமையான சந்தைப் போட்டியை ஸ்கோடா ரேபிட் கார் எதிர்கொண்டு வருகிறது. இந்த சந்தைப் போட்டியை லாவகமாக எதிர்கொள்ளும் வகையில், முற்றிலும் புதிய தலைமுறை அம்ங்களுடன் ஸ்கோடா ரேபிட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் வெளியிடப்பட்ட ஸ்கோடா ரேபிட் காரின் புதிய தலைமுறை மாடல் வடிவமைப்பில் முற்றிலும் புதிய மாடலாக மாறி இருக்கிறது. இதனால், இந்த கார் இந்தியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இது நிச்சயம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் அறிமுகம் குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் ட்விட்டரில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அந்த கேள்வி பதில் டீம் பிஎச்பி தளத்தின் மூலமாக வெளியாகி இருக்கிறது.

அதில், வெளிநாடுகளில் அறிமுகமாகும் புதிய மிட்சைஸ் செடான் கார் நேரடியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படாது. இந்தியாவுக்கான பல பிரத்யேக அம்சங்களுடன் கொண்டதாக புதிய மிட்சைஸ் செடான் காரை அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளோம்," என்று பதில் தெரிவித்துள்ளார். இதனால், அடுத்த ஆண்டு இறுதியில் ஸ்கோடா ரேபிட் காருக்கு மாற்றாக புதிய மிட்சைஸ் செடான் கார் அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா ரேபிட் கார் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும் என்பதுடன், பெரும்பாலான உதிரிபாகங்கள் இந்திய சப்ளையர்களிடம் இருந்து பெறுவதற்கும் ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இதனால், விலையை மிக சவாலாக நிர்ணயிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

தற்போது பிஎஸ்6 ரேபிட் காரில் இடம்பெற்றிருக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்தான் புதிய தலைமுறை ஸ்கோடா மிட்சைஸ் செடான் காரிலும் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த எஞ்சின் 110 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம்.

அருமையான டிசைன், சிறந்த கட்டுமானத் தரம், போதுமான வசதிகளுடன் இந்தியர்களை வெகுவாக கவரும் வகையில் இந்த புதிய மிட்சைஸ் செடான் காரை கொண்டு வருவதற்கு ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த கார் நிச்சயம் இந்தியர்களை கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








