இந்தியாவில் அனைத்து கார்களிலும் 'ஜீபூம்பா' வசதி: ஹூண்டாய்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும் கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதியை அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நவீன தொழில்நுட்ப வசதிகளை கார்களில் அளிப்பதில் முன்னோடியாக உள்ளது. டிசைனில் மட்டுமல்லாது, தொழில்நுட்ப அம்சங்களிலும் போட்டியாளர்களை விஞ்சும் அளவுக்கு ஹூண்டாய் கார்கள் இருக்கும். வாடிக்கையாளர்களை ஹூண்டாய் கார்கள் கவர்வதற்கு இதுவும் முக்கிய விஷயமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போதைய தசாப்தத்தின் மிக நவீன தொழில்நுட்ப வசதியாக கனெக்டெட் கார் தொழில்நுட்பம் கருதப்படுகிறது. இதுவரை கார்களில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தை ஸ்மார்ட்ஃபோனுடன் புளூடூத் அல்லது ஆக்ஸ் போர்ட் வழியாக இணைத்து பாடல்களை கேட்பது உள்ளிட்ட வசதிகளை பெற முடிந்தது.

ஆனால், இதன் மேம்பட்ட தொழில்நுட்பமாக இப்போது கார்களில் வழங்கப்படும் இன்ஃபோடெயின்மென்ட் சாதனங்களில் பிரத்யேக சிம் கார்டு கொடுக்கப்பட்டு, நேரடியாக இன்டர்நெட் வசதியை பெறக்கூடிய தொழில்நுட்பம்தான் கனெக்டெட் கார் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, உங்களது காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும், ஸ்மார்ட்ஃபோனையும் ரிமோட் முறையில் இந்த தொழில்நுட்பம் இணைத்து விடுகிறது.

இந்த நவீன வசதியை ஹூண்டாய் நிறுவனம் முதல் ஆளாக இந்திய சந்தையில் வழங்கத் துவங்கி முன்னோடியாக மாறி இருக்கிறது. கடந்த ஆண்டு தனது வெனியூ காரில் முதல்முறையாக கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதியை ஹூண்டாய் மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.

இந்த வசதி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. இதைத்தொடர்ந்து, வெர்னா, எலான்ட்ரா மற்றும் புதிய தலைமுறை க்ரெட்டா எஸ்யூவியிலும் இந்த கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் நேவிகேஷனை தவிர்த்து, மேற்கண்ட பல்வேறு வசதிகளை அளிப்பதால், இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு ஜீபூம்பா அனுபவத்தை தருகிறது.

காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் புளூலிங்க் என்ற ஹூண்டாய் நிறுவனத்தின் பிரத்யேக செயலியை ஸ்மார்ட்ஃபோனில் தரவிறக்கம் செய்து இணைத்துக் கொண்டால், பொழுதுபோக்கு மட்டுமின்றி, கார் கட்டுப்பாட்டு வசதிகளையும் இதன் மூலமாக பெற முடியும்.

இந்த புளூலிங்க் தொழில்நுட்பத்தை புதிய தலைமுறை மாடலாக வர இருக்கும் ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் வழங்க இருக்கிறது. கார் அண்ட் பைக் தளத்திடம் பேசிய ஹூண்டாய் இந்தியா விற்பனைப் பிரிவு அதிகாரி தருண் கர்க் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

மேலும், இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும் இந்த புளூலிங்க் செயலியுடன் கூடிய கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதியை அளிக்கவும் திட்டம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது, அடுத்து ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியிலும் இந்த வசதி அளிக்கப்பட இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ, வெர்னா, புதிய தலைமுறை க்ரெட்டா கார்களில் வழங்கப்படும் புளூலிங்க் செயலி மூலமாக 50 வசதிகளை பெற முடியும். இது மாடலுக்கு தக்கவாறு வேறுபடுகிறது. இருப்பினும், இதில் பல வசதிகள் பொதுவானதாக இருக்கும்.

அதாவது, கார் எஞ்சினை வீட்டுக்குள் இருந்தபடியே மொபைல்போனில் உள்ள புளூலிங்க் செயலி மூலமாக ஸ்டார்ட் செய்யவோ அல்லது அணைக்கவோ முடியும். அதேபோன்று, ஏசி சிஸ்டத்தை ஆன் செய்வதற்கும், வெப்ப நிலையை விருப்பமான அளவில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிறது.

கார் குறிப்பிட்ட எல்லையை விட்டு வெளியே செல்லாமல் செய்வதற்கான ஜியோ ஃபென்சிங் வசதி, வேகக் கட்டுப்பாட்டு வசதி என அனைத்துமே இதில் சாத்தியமே. கார் திருடுபோனால் அது எங்கு இருக்கிறது அல்லது எந்த வழியில் செல்கிறது உள்ளிட்ட பல வசதிகளை தெரிந்துகொள்ள முடியும். இது நிச்சயம் கார்களின் பாதுகாப்பையும், வசதிகளையும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications








