இந்தியாவிலேயே முதல் முறை! காஷ்மீரில் பெண்களுக்காக நிகழ்த்தப்பட்ட சிறப்பு பேரணி... எதற்காக தெரியுமா?
இந்தியாவிலேயே முதல் முறையாக காஷ்மீரில் பெண்களுக்காக சிறப்பு கார் பேரணி நிகழ்த்தப்பட்டுள்ளது.

மிகவும் வலிமையானவர்கள், உறுதியானவர்கள் என பெருமை கொள்ளும் ஆண்களால் பிரசவலியை தாங்க முடியாதாம். சில அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இதனை உறுதியுடன் கூறுகின்றனர். ஆனால், இத்தகைய வலியையும், குடும்பத்தின் அனைத்து சூழல்களையும் மிகவும் அமைதியாகக் கடந்துச் செல்லும் அவிற்கு மிகவும் வலிமையானவர்களே 'பெண்கள்'.

ஆனால், அவர்களை இந்த சமூகமும், ஆணாதிக்க வர்க்கமும் 'வீடு' எனும் ஒற்றைச் சொல்லில் அடக்கி ஆள்கின்றனர். பெண் என்பவள் மென்மையானவள், அவர்களுக்கு எதையும் உறுதியுடன் கையாள தெரியாது எனகூறி, வீட்டின் அடுப்படியிலேயே அவர்களை தங்க வைத்துவிடுகின்றனர். தற்போதும் நாட்டின் பல இடங்களில் இந்த கொடுமை அரங்கேறிக் கொண்டுான் இருக்கின்றன.

இதுமட்டுமின்றி பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்புணர்வு சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு, உபி மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் மிக சமீபத்தில் அரங்கேறிய இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவமே மிக சிறந்த உதாரணம். இம்மாதிரியான சூழ்நிலையிலேயே பெண்களுக்கு வலு சேர்க்கும் விதமாக காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு பேரணி நிகழ்வு ஒன்று அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் காஷ்மீர் மாநில போக்குவரத்துத் துறை சார்பில், சிறப்பு கார் ரேல்லி நிகழ்வு நிகழ்த்தப்பட்டது. பெண்களை ஊக்குவிக்கும் முதல் கட்ட நடவடிக்கையாக, பெண் டிரைவர்களை ஊக்குவிக்க இந்த பேரணி நிகழ்த்தப்பட்டது. இதில் பெண்கள் மற்றும் பல முக்கிய நபர்கள் கலந்துக் கொண்டனர்.

குறிப்பாக, பெண் ஓட்டுநர்கள் சார்ந்து நிலவி வரும் கட்டுக்கதைகளை உடைக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீநகர் போலீஸாருடன் இணைந்து, தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த கார் பேரணி நிகழ்வை மேற்கொண்டிருக்கின்றது. 'பெண்கள் சரியாக வாகனங்களை ஓட்ட மாட்டார்கள், அவர்கள் எப்போது, எப்படி திரும்புவார்கள் என்றே தெரியாது' இவ்வாறு பல கட்டுக் கதைகள் உலாவிய வண்ணம் இருக்கின்றன.

இதனை உடைத்தெறிந்து அனைத்து பெண்களும் வாகனங்களை சுயமாக இயக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக தற்போதைய கார் பேரணி மேற்கொள்ளப்பட்டது. எனவே, பெண்கள் தைரியமுடன் வாகனங்களை இயக்க வெளியே வர வேண்டும் என்பதே இந்த பேரணியின் ஒரே நோக்கமாக இருக்கின்றது.

இந்த கார் பேரணியில் கலந்துக் கொண்ட செய்க் சபா, எனும் ஆர்வலர் இந்நிகழ்வுகுறித்து கூறியதாவது, "இந்த பேரணியின் நோக்கம் பெண்கள் சிறந்த ஓட்டுநர்கள் அல்ல என்ற கட்டுக்கதையை உடைப்பதாகும். இந்த சமூகம், பெண்கள் சரியாக வாகனம் ஓட்டமாட்டார்கள் என கூறுகின்றது. ஆனால், நம் வீடுகளையும், அலுவலகங்களையும் இயக்க முடிந்தால், பெண்களால் ஏன் வாகனங்களை இயக்க முடியாது?., இந்த பேரணி பெண்கள் ஓட்டுநர்களை மதிக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்கானது" என கூறினார்.

தொடர்ந்து பேசிய டாக்டர் ஷர்மீல், "மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்" என குறிப்பிட்டார். மேலும், "இதுபோன்ற பேரணிகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும். இது பெண் ஓட்டுநர்களை ஊக்குவிக்கும். பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஆதாரமாகும். பெண் ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் இந்த பேரணி இந்தியாவிலேயே முதல் முறையாக நடைபெறுகிறது," என்று அவர் கூறினார்.

கார் பேரணியின் அமைப்பாளர் சையத் சிப்டன் காத்ரி கூறுகையில், "ஆண் ஓட்டுநர்களை விட பெண் ஓட்டுநர்கள் குறைவான விபத்துக்களில் ஈடுபடுகின்றனர். ஆகையால் நாங்கள் பெண்களை அதிகமாக ஓட்ட ஊக்குவிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

பெண்களை ஊக்குவிக்கும் முதற்கட்ட முயற்சியாக தன்னார்வல தொண்டு நிறுவனத்தால் இந்த பேரணி நிகழ்த்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்று பெண்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் நாடு முழுவதும் நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், தற்போது அரங்கேறியிருக்கும் இந்த பேரணி மூலம் மக்கள் மத்தியில் பெண் ஓட்டுநர்கள் குறித்து நிலவி வந்த சில கட்டுகதைகள் உடைக்கப்படும் சூழல் உருவாகியிருக்கின்றது.

பெண் டிரைவர்களை, சில வாகன ஓட்டிகள் (ஆண்கள்) 'எப்படி போறா பாரு...' என கண்டபடி திட்டுவதைக் கேட்டிருப்போம். அந்த நேரத்தில் பெண் ஓட்டுநர்களை ஊக்குவிக்கப்பது நம் அனைவரின் கடமை என்பதை மறந்துவிடுகின்றோம். உலக நாடுகள் பலவற்றில் கனரக வாகனம் முதல் விமானம் வரை அனைத்து வகையிலான வாகனங்களையும் இயக்க பெண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஆனால், இந்தியாவில் இப்போதுதான் பெண்கள் இருசக்கர வாகனம், ஆட்டோ போன்ற வாகனங்களை இயக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதேசமயம், அரசின் முயற்சியால் பெண்கள் இரயில் மற்றும் விமானம் போன்றவற்றின் இயக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே மேலும் ஊக்குவிக்கும் விதமாக நாட்டிலேயே முதல் முறையாக காஷ்மீரில் கார் பேரணி நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆங்கில செய்தி தளமான ஏஎன்ஐ வாயிலாக இந்த செய்தி ஒரு சில மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பு: சில படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








