இந்த செய்திய படிச்சதுக்கு அப்புறமும் டட்சன் கார் வாங்குவீங்க?
இந்தோனேஷியாவில் டட்சன் பிராண்டுக்கு மூடுவிழா நடத்தப்பட்டு இருக்கிறது. அடுத்து இந்தியாவிலும் டட்சன் பிராண்டுக்கு மூடுவிழா நடத்தப்பட இருப்பதாக தெரிகிறது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

ஜப்பானிய கார் நிறுவனமான நிஸான் மிக குறைவான விலை கார்களுக்காக டட்சன் பிராண்டை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது. ரஷ்யா, ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் டட்சன் பிராண்டில் கோ, கோ ப்ளஸ், ரெடிகோ, கோ க்ராஸ் உள்ளிட்ட கார் மாடல்களை நிஸான் விற்பனை செய்து வருகிறது.

ஆனால், டட்சன் பிராண்டு கார்கள் எதிர்பார்த்த அளவு விற்பனையில் சோபிக்கவில்லை. இந்த நிலையில், நிஸான் நிறுவனம் வருவாய் இழப்பை மனதில் வைத்து உலக அளவில் பல்வேறு வர்த்தக சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, டட்சன் பிராண்டுக்கு மூடுவிழா நடத்த முடிவு செய்துள்ளது.

தற்போது இந்தோனேஷியாவில் டட்சன் பிராண்டுக்கு மூடு விழா நடத்தப்பட்டு இருக்கிறது. மேலும், அங்கு செயல்பட்டு வந்த தனது இரண்டு கார் ஆலைகளையும் மூடிவிட்டது. அந்நாட்டிலுள்ள கரவாங் என்ற இடத்தில் இருந்த ஆலையில் நிஸான் கார்களும், புர்வகர்தா என்ற இடத்தில் இருந்த ஆலையில் டட்சன் கார்களும் உற்பத்தி செய்யப்பட்டன.

இந்த இரண்டு ஆலைகளையும் இப்போது நிஸான் மூடுவிழா நடத்தியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். எனினும், நிஸான் கார்கள் தொடர்ந்து அங்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளன.

அதாவது, எக்ஸ்-ட்ரெயில், செரினா ஆகிய கார் மாடல்கள் ஜப்பானில் உள்ள நிஸான் ஆலையில் இருந்து இறக்குமதி செய்து இந்தோனேஷியாவில் விற்பனை செய்யப்படும். நவரா பிக்கப் டிரக் மாடலானது தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. மேலும், லிவினியா எம்பிவி கார் மாடலானது அங்குள்ள தனது கூட்டாளியான மிட்சுபிஷி நிறுவனத்தின் ஆலையில் உற்பத்தி செய்ய நிஸான் திட்டமிட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடலும் தாய்லாந்து நாட்டில் உள்ள ஆலையில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெறும் டட்சன் பிராண்டில் 7,000 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இலக்கு வைக்கப்பட்டதைவிட இந்த எண்ணிக்கை மிக குறைவாக இருந்ததால், அங்கு டட்சன் கார்கள் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும், வரும் 2022ம் ஆண்டுக்குள் இந்தியா உள்பட உலக அளவில் டட்சன் பிராண்டு கார்கள் விற்பனை நிறுத்தப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவிலும் டட்சன் பிராண்டு கார்களின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. நிஸான் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் உலக அளவில் 12,500 பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விலை குறைவான பட்ஜெட் கார் வாங்க விரும்புவோருக்கு அதிக இடவசதி மற்றும் தொழில்நுட்பங்களுடன் இந்த கார்களை நிலைநிறுத்த நிஸான் முயற்சித்தது. ஆனால், அதற்கு போதிய பலன் கிடைக்காததால், இந்த முடிவை அந்நிறுவனம் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. எனவே, டட்சன் காரை வாங்குவோருக்கு எதிர்காலத்தில் மறுவிற்பனை மதிப்பு, உதிரிபாகங்கள் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. நிஸான் வாயிலாக சேவைகள் வழங்கப்பட்டாலும் அது எத்தனை ஆண்டுகளுக்கு கிடைக்கும் என்பது தெரியாது.


Click it and Unblock the Notifications








