கார்களில் கொரோனா ஒழிப்பு... வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சர்வீஸ் திட்டத்தை வழங்கும் நிஸான்!
இந்திய வாடிக்கையாளர்களின் கார்களில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக புதிய சர்வீஸ் திட்டத்தை நிஸான் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா பிரச்னை தலை விரித்தாடுகிறது. வெளியில் சென்றாலே, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டது. அத்துடன், எங்கு இருக்கும், எப்படி இருக்கும் என்று தெரியாத கொரோனாவை ஒழிக்கும் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இதற்கு உறுதுணையாக பொதுமக்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், கார் நிறுவனங்கள் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு நிதி உதவிகளை வழங்கி வருவதுடன், தங்களது வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், நிஸான் கார் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சர்வீஸ் திட்டத்தை இந்தியாவில் அறிவித்துள்ளது. அதன்படி, தனது வாடிக்கையாளர்களின் கார்களில் கிருமி நீக்கம் செய்து தருவதற்கான சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

கார்களின் கைப்பிடி, ஸ்டீயரிங் வீல், கியர் நாப் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி தொற்று ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சர்வீஸ் திட்டம் மூலமாக கிருமித் தொற்றும் வாய்ப்புள்ள இடங்கள் விசேஷ முறையில் கிருமி நீக்கம் செய்யப்பட்டு தரப்படும்.

அத்துடன், கேபினுக்குள் ஏசி சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் கிருமீ நீக்கம் மற்றும் சுத்தம் செய்து தரும் சர்வீஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை கட்டணமில்லாமல் செய்து தர இருப்பதாக நிஸான் கார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிப்புறம் மற்றும் உட்புறத்திற்கு முழுமையான கிருமி நீக்க சர்வீஸ் திட்டத்தையும் மலிவு கட்டணத்தில் செய்து தர உள்ளதாகவும் நிஸான் தெரிவித்துள்ளது. வரும் 15ந் தேதி முதல் ஜூன் 30ந் தேதி வரை இந்த சர்வீஸ் திட்டம் செயல்பாட்டில் இருக்கும்.

இதுதொடர்பாக, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிஸான் நிறுவனம் டீலர்கள் மூலமாக தகவல் தெரிவிக்க உள்ளது. தனது இணையதளம், சமூக வலைத்தளங்கள், இமெயில் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட உள்ளதாகவும் நிஸான் கூறி இருக்கிறது.

இதுகுறித்து நிஸான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில்," எங்களது வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், டீலர்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளதோடு, அவர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இந்த சவாலான தருணத்தில், சமூக நலனுக்காக கொரோனா தொற்றை நீக்கும் வகையில், சிறப்பு கிருமி நீக்க திட்டங்களை வழங்க உள்ளோம்.

நிஸான் மற்றும் டட்சன் கார் உரிமையாளர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பெரிதும் பயனடைவதுடன், தொற்று நோயை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் அமையும்," என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








