இதுதான் இந்தியாவின் முதல் இன்டர்சிட்டி மின்சார பேருந்து.. ஒரு முழுமையான சார்ஜில் இத்தனை கிமீ போகலாமா
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவிற்கான முதல் இன்டர்-சிட்டி மின்சார பேருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கின்ற முயற்சி நாளுக்கு தீவிரம் அடைந்து வருகின்றன. அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமயமாதலே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சுகலந்த புகை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, அவை காலநிலையை மாற்றமடைய செய்வதுடன் இனம் கண்டறிய முடியாத வியாதிகளைத் தோற்றுவிக்கின்றன.

ஆகையால், இதில் இருந்து தீர்வு காண வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கின்ற முயற்சியில் மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றன.

இதற்கு முன்னோடியாக நாட்டில் இயங்கும் பொதுத்துறையில் மின் வாகனங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், நாட்டின் முதல் இன்டர்சிட்டி மின்சார பேருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த பேருந்தை மத்திய போக்குவரத்துத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துரை அமைச்சரான நிதின் கட்காரி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நாட்டிலேயே இன்டர்சிட்டி பேருந்தாக பயன்பாட்டிற்கு வரும் முதல் மின்சார வாகனம் என்பதால் அநேகரின் கவனத்தை இது ஈர்த்திருக்கின்றது.
இந்த மின்சார பேருந்து மும்பை டூ புனே இடையே இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

43 இருக்கைகளைக் கொண்ட இந்த மின்சார பேருந்து பல்வேறு லக்சுரி சொகுசு வசதிகளை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புஷ்-பேக் இருக்கை, செல்போன் சார்ஜிங், தாராளமான இடவசதி உள்ளிட்டவை இந்த பேருந்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

இத்தகைய சிறப்புமிக்க மின்சார பேருந்தை மித்ரா மொபிலிட்டி சொல்யூசன் என்ற நிறுவனம் தயாரித்திருக்கின்றது.
இப்பேருந்து ஒரே ஒரு முழுமையான சார்ஜில் 300 கிமீ தூரம் வரை செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது. தினசரி பயணத்தின் அடிப்படையில் இந்த பேருந்து பயன்படுத்த இருக்கின்றது. குறிப்பாக நாள் ஒன்றிற்கு இரு முறை பயணம் என்பதன் அடிப்படையில் இயக்கப்பட உள்ளது.

மித்ரா மொபிலிட்டி நிறுவனம் ஏற்கனவே 1,300 பேருந்துகளை இயக்கி வருகின்றது. தற்போது, மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே இந்த சேவையை வழங்கி வரும் இந்நிறுவனம் விரைவில் அதைச்சுற்றியுள்ள மாநிலங்களிலும் அதன் சேவையைத் தொடர இருக்கின்றது.
அதற்கான முயற்சியில் தற்போது நிறுவனம் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்கநர் பிரசன்னா பட்வர்தான் தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்த பேருந்தின் திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "தற்போது நாம் தீவிரமாக மேற்கொண்டு வரும் முயற்சிகளினால் இன்னும் 4 முதல் 5 ஆண்டுகளுக்குள்ளாக நாட்டில் இயங்கும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரிக்க இருக்கின்றது" என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "அரசு மற்றும் அரசு சாரா தனியார் நிறுவனங்கள் இதுவரை 10 ஆயிரம் மின் வாகனங்களுக்கான ஆர்டரை கொடுத்துள்ளனர். ஆகையால், நாங்கள் நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க திட்டமிட்டு வருகின்றோம்" என கூறினார்.

ஏற்கனவே, தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக பல்வேறு பொதுசேவை தனியார் நிறுவனங்கள் கணிசமாக மின்வாகனங்களைப் பயன்பாட்டில் களமிறக்கியிருக்கின்றன. குறிப்பாக, அமேசான் அதன் டெலிவரி சேவையில் மின்சார வாகனங்களை களமிறக்கியிருக்கின்றது.

இதேபோன்று, கால் டாக்ஸி சேவையில் ஈடுபடும் ஓலா மற்றும் ஊபர் ஆகிய நிறுவனங்களும் அதன் சேவையில் மின் வாகனங்களை களமிறக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதுபோன்ற, அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக நாட்டில் மின்சார வாகனங்களின் அறிமுகம் அதிகரித்து வருகின்றது.


Click it and Unblock the Notifications








