சிறிய கார்களுக்கு பிஎஸ்-6 டீசல் எஞ்சின்... மாருதி எடுத்த அதிரடி முடிவு!
சிறிய வகை கார்களுக்கானபிஎஸ்-6 டீசல் எஞ்சினை உருவாக்கும் திட்டம் குறித்து மாருதி அதிரடியான முடிவை வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த கடுமையான மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களுடன் வாகனங்களை விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டது. குறைவான மாசு உமிழ்வு தரத்தை எட்டுவதற்காக எஞ்சின்களை பெரும் முதலீடு செய்து அனைத்து வாகன நிறுவனங்களும் மேம்படுத்தின.

அதேநேரத்தில், பல நிறுவனங்கள் டீசல் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கான முதலீடு மற்றும் அதற்கான வர்த்தக வாய்ப்புகளை மனதில் வைத்து தவிர்த்தன. அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகியும் டீசல் எஞ்சின் கார்களை விற்பனையில் இருந்து ஒதுக்கியது.

பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி கார்கள் பக்கம் கவனத்தை திருப்பியது. மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட், டிசையர், எர்டிகா உள்ளிட்ட பல மாடல்களில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு சொந்தமாக உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் சில மாடல்களை அறிமுகப்படுத்தியது. அதிக மைலேஜ், குறைவான பராமரிப்பு என்பதால், மாருதி டீசல் கார்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது.

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தர விதிகளையடுத்து, இந்த டீசல் எஞ்சின்கள் வழக்கொழிக்கப்பட்டுவிட்டன. டீசல் எஞ்சின்களை மேம்படுத்தினாலும், அதற்கான வர்த்தக வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதாக கருதி டீசல் கார் மாடல்களை மாருதி தவிர்த்தது.

இந்த நிலையில், மாருதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஹூண்டாய் மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் டீசல் எஞ்சின் தேர்வுகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. இதனால், மாருதியின் டீசல் கார்களுக்கான வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களின் பக்கம் போகும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த சூழலில், டீசல் கார்களை கொண்டு வரும் திட்டம் குறித்து மீண்டும் மாருதியிடம் பலர் கேள்விகளை முன் வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக, செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள மாருதி உயர் அதிகாரி சஷாங்க் ஸ்ரீவத்சவா," சிறிய வகை கார்களில் டீசல் எஞ்சின்களை கொடுக்கும் வாய்ப்பு இல்லை.

அதில் எந்த அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லை. எதிர்காலத்தில் பெட்ரோல் கார்களுக்கான மார்க்கெட்தான் அதிகம் இருக்கும். எனவே, சிறிய டீசல் எஞ்சின்களை உருவாக்கும் திட்டம் அறவே இல்லை. மேலும், ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் வெறும் 5 சதவீதம்தான் டீசல் கார்களுக்கான பங்காக உள்ளது.

வர்த்தக ரீதியிலும் அது சாத்தியப்படாத விஷயமாகவே கருத முடியும். அதேநேரத்தில், பெரிய வகை கார்களில் டீசல் எஞ்சின் தேர்வு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். இதுதொடர்பாக, சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஆனால், இதுவரை பெரிய கார்களுக்கான டீசல் எஞ்சின் கொடுப்பது முடிவு எடுக்கப்படவில்லை" என்று அவர் கூறி இருக்கிறார்.

பெட்ரோல், டீசல் இடையிலான விலையில் அதிக வித்தியாசம் இல்லாததும் தற்போது டீசல் எஞ்சின்களுக்கான சந்தையை படுக்க வைத்துவிட்டது. அதேபோன்று, பெட்ரோல் கார்களைவிட அதிக விலை, பராமரிப்பு செலவு போன்றவற்றுடன், எதிர்காலத்தில் டீசல் எஞ்சின் கார்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து கடுமையான விதிகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக வெளிவரும் செய்திகளும் வாடிக்கையாளர்களை டீசல் மாடல்கள் மீதான மோகத்தை குறைத்து வருகின்றன.


Click it and Unblock the Notifications