ஒலா & உபர் கேப் சேவை மீண்டும் துவங்கியது... பயணிகளுக்கு பல நிபந்தனைகள் விதிப்பு...
இந்திய அரசாங்கத்தின் வழிக்காட்டுதலின்படி, ஒலா மற்றும் உபர் நிறுவனங்கள் நேற்று (மே 4) முதல் தங்களது கேப் சேவைகளை நாடு முழுவதிலும் குறிப்பிட்ட பகுதிகளில் மீண்டும் துவங்கியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதியில் இருந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது கடந்த மே 3ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் வைரஸின் பரவல் கட்டுக்குள் வராததால் கூடுதலாக இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இம்முறை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களும் சிவப்பு, ஆரஞ்ச் மற்றும் பச்சை என 3 நிறங்களாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கு ஏற்றாற்போல் ஊரடங்கு அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது சிவப்பு பகுதி என்றால் வைரஸின் பரவல் அதிகம் உள்ள பகுதி என்றும், ஆரஞ்ச் பகுதி என்றால், வைரஸின் தாக்கம் சற்று குறைவாக உள்ள பகுதி என்றும் அர்த்தம்.

கொரோனா வைரஸினால் ஒருவர் கூட பாதிக்காத மாவட்டங்களே பச்சை பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகள் மற்றும் சிறு,குறு வணிகங்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் மீண்டும் பணியினை துவங்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தான் ஒலா மற்றும் உபர் கேப் நிறுவனங்கள் ஆரஞ்ச் மற்றும் பச்சை பகுதிகளில் மீண்டும் சேவையை துவங்கியுள்ளன. கடந்த மே 4ஆம் தேதி முதல் ஆரம்பமாகியுள்ள இவற்றின் சேவைகள் எந்தெந்த பகுதிகளில் வழங்கப்படவுள்ளது என்பதை தங்களது ஆப் மூலமாக அறியலாம் என இவ்விரு நிறுவனங்களும் கூறியுள்ளன.

ஒரு காரில் இரு பயணிகளுக்கு மேல் பயணிக்கக்கூடாது மற்றும் ஓட்டுனருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமரக்கூடாது என்பது அரசின் ஆணை. இது ஒலா மற்றும் உபர் நிறுவனங்களுக்கும் பொருந்தும். மற்றப்படி இந்த ஊரடங்கு காலத்தில் சிவப்பு பகுதிகளுக்கு அத்தியவாசிய மற்றும் மருத்துவ சேவைகளை உபர் நிறுவனம் தொடர்ந்து வழங்கவுள்ளது.

மேலும் வழக்கமாக சிவப்பு பகுதி வழியாக செல்லும் இந்நிறுவனத்தின் கார்கள் இந்த ஊரடங்கு முடிவுக்கு வரும் வரை அத்தகைய பகுதிகளை தவிர்த்து நீண்ட தூரமாயினும் ஆரஞ்ச் மற்றும் பச்சை பகுதிகளின் வழியாகவே செல்லும்.

அதேபோல் காரில் ஏறும் முன்னரும் இறங்கிய பின்னரும் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்றியுள்ளாரா என்பதை ஓட்டுனரும் பயணியும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். பயணியோ அல்லது ஓட்டுனரோ முக கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என தோன்றினால் இருவரில் யாரும் வேண்டுமானாலும் பயணத்தை அப்போதே முடித்து கொள்ளலாம்.

ஏனெனில் ஓட்டுனர் மற்றும் பயணி என இருவரும் முறையாக பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால் தான் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என ஒலா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சுப்ரமணியன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








