2021ல் இந்த நகரத்தில் நிச்சயம் பறக்கும் கார்கள் வட்டமடிக்கும்! எந்த நகரம்னு தெரிஞ்சா அசந்துருவீங்க!!
உலகின் சிறப்பு வாய்ந்த நகரம் ஒன்றில் விரைவில் சோதனையோட்டமாக பறக்கும் கார்கள் பயன்பாட்டுக்கு களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றில் தற்போதும் விமானத்தில் பறப்பது என்பது பலரின் கனவாகவே இருந்து வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் விரைவில் மக்களின் பயன்பாட்டில் பறக்கும் கார்கள் களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றன.

ஆம், வெகுவிரைவில் உலகின் வாடகை வாகன சந்தையில் பறக்கும் கார்கள் களமிறக்கப்பட இருக்கின்றன. முதலில் பாரிஸ் நகரத்திலேயே இந்த நிகழ்வு அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல் இதனை உறுதி செய்கின்ற வகையில் அமைந்திருக்கின்றது.

ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் வோலோகாப்டர். இந்நிறுவனமே இதற்கான முயற்சியில் தற்போது முழு வீச்சுடன் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் தயாரித்து வரும் வோலோசிட்டி என்றழைக்கப்படும் ட்ரோன் ரக மின்சார பறக்கும் காரே பாரிஸ் நகரத்தின் வடக்கு பகுதியில் பறக்கும் கால் டாக்சிகளாக வட்டமடிக்க இருக்கின்றன.

இந்த நிகழ்வு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் கட்டாயம் அரங்கேற்றப்படும் என அதன் ஆபரேட்டர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2024ம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியின்போது, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இந்த முன்னோட்ட நிகழ்வு பாரிஸ் நகரத்தில் செய்யப்பட இருக்கின்றது.

90 நிமிடங்கள் பயண நேரம் என்ற அளவீட்டின்படி பாரிஸ் நகரத்தின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் குறிப்பிட்ட சில இடங்களில் வோலோசிட்டி மின்சார பறக்கும் கார்கள் ரிங்காரமடிக்க இருக்கின்றன. இதுகுறித்த தகவலை பிரான்ஸ் நாட்டின் வான் வழிப்போக்குவரத்துத்துறை மற்றும் பறக்கும் கார் தயாரிக்கும் நிர்வாகம் ஆகிய இரண்டும் கூட்டாக சேர்ந்து அறிவித்துள்ளன.

பயணிகள் வாகனமாக மட்டுமின்றி சரக்கு வாகனங்களாகவும் இந்த ட்ரோன் ரக பறக்கும் கார்கள் விரைவில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. ஆகையால், தற்போது பெட்ரோல்-டீசல் வாகனங்கள் சாலைகளை ஆட்சி புரிவதைப் போல் எதிர்காலத்தில் பறக்கும் வாகனங்கள் வானத்தை ஆளுகைச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்துகின்ற வகையிலேயே வோலோசிட்டி நிறுவனத்தின் அறிவிப்பு அமைந்திருக்கின்றது.

இதற்காக, அனைத்து விதமான அங்கீகாரத்தையும் பெறும் முயற்சியில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, பாரிஸ் குடியிருப்பு வாசிகள் மற்றும் வான் வழிப் போக்குவரத்துத்துறையிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து பறக்கும் காரின் பார்க்கிங் பகுதி, ரீசார்ஜ் நிலையம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்வதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வோலோசிட்டி பறக்கும் காரானது 18 ஃபேன் ரோட்டார்களைத் தனது தலைப் பகுதியில் கொண்டிருக்கின்றது. இதற்கு தேவையான ஒட்டுமொத்த மின்சாரத்தையும் 9 பேட்டரிகள் வழங்குகின்றன. அதிக எண்ணிக்கையில் ரோட்டார்களை இது கொண்டிருக்கின்ற காரணத்தினால் இதன் தலைப் பகுதி சற்று பெரியதாக இருக்கின்றது. எனேவதான் இது கூடுதல் இடத்தை ஆக்கிரமிப்பு செய்கின்றது.

இருப்பினும், இதன் பயணிகள் கேபின் பகுதி சிறியதாக மட்டுமே இருக்கின்றது. இதில், இருவர் மட்டுமே தங்களது லக்கேஜ்களுடன் பயணிக்க முடியும். அதேசமயம், 200 கிலோ வரை இந்த வாகனத்தில் பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 110 கிமீ ஆகும். மேலும், செங்குத்தாக டேக்-ஆஃப் செய்யும் திறனை இது பெற்றிருக்கின்றது. இதேபோன்று தரையிறங்க முடியும்.

எனவே, இந்த பறக்கும் மின்சார காருக்கு ஓடு தளம் மற்றும் இறங்கு தளம் என தனி தனியாக தேவைப்படாது. உச்சபட்சமாக இந்த வாகனம் 1,312 முதல் 1,640 அடி வரை பறக்கும். ஆகையால், இந்த பறக்கும் காரில் பயணிக்கும்போது பாராகிளைடரில் பறப்பதைப் போன்ற அனுபவம் அதன் பயணிகளுக்கு என கிடைக்கும்.

ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு முன்னோட்டமாக தொடங்கப்படும் இந்த சேவை முழு வீச்சில் 2030ம் ஆண்டிற்குள் பயன்பாட்டுக்கு வரும் என பறக்கும் கார் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரி ஃபேபியன் நெஸ்ட்மேன் கூறியிருக்கின்றார். பறக்கும் கார் அனைத்து விதமான சான்றிதழ்களைப் பெற மற்றும் முழு கால் டாக்சி வாகனமாக மாற குறிப்பிட்ட சில ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும்.

எனவேதான், 2030ம் வரை அந்த நிறுவனம் காலக் கெடுவாக குறிப்பிடுகின்றது. இதன் பின்னர் பயண சீட்டுப் பெற்று பயணிக்கின்ற அளவிற்கு அது மிக சுலபமான வாகனமாக மாறிவிடும் என்று மிக உறுதியாக நெஸ்ட்மேன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








