உற்பத்தி துறைகளுக்கு ஊக்கத் தொகை திட்டம்... ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மகிழ்ச்சி!
இறக்குமதியை குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊக்கத் தொகை திட்டம் ஆட்டோமொபைல் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு ஊக்கத் தொகை திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், உற்பத்தித் துறைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதன்படி, ஆட்டோமொபைல் துறை, வாகன உதிரிபாகங்கள் துறை, மருந்துப் பொருட்கள் உற்பத்தித் துறை, சிறப்பு உருக்கு உற்பத்தி, மூலதனப் பொருட்கள், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு உற்பத்தி அடிப்படையில் ஊக்கதொகை வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்ட 10 முக்கிய உற்பத்தித் துறைகளில் ஆட்டோமொபைல் துறைக்குத்தான் அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. அதாவது, மொத்தம் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீட்டில் ஆட்டோமொபைல் துறைக்கு மட்டும் ரூ.57,042 கோடி ஊக்கதொகை வழங்கப்பட உள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ் பல முக்கிய பாகங்களை இறக்குமதி செய்வதை தவிர்த்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதேபோன்று, வாகன ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சீனாவிலிருந்து வாகனங்களுக்கு பல முக்கிய உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்கும், வெளிநாட்டு உதிரிபாகங்கள் இறக்குமதியை நம்பி இருப்பதையும் இந்த திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தித் துறைக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பதால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்வதற்கும் ஏதுவாக அமையும் என்று சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஆட்டோமொபைல் துறைக்கு இது ஏற்றம் தரும் திட்டமாக அமையும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








