எந்தவொரு மதகுருவும் இப்படி ஒரு காரை பயன்படுத்தவில்லை! மக்களை ஆச்சரியத்தில் திணற வைத்த போப்பாண்டவர்!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வத்திகான் நகர அரசின் இறையாண்மையுமான போப் பிரான்சிஸிற்காக புத்தம் புதிய கார் ஒன்று வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் பயன்பாட்டிற்காக புதிய கார் களமிறக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போப் பிரான்சிஸ், உலகின் முக்கியமான மதக் குருக்களில் ஒருவர் ஆவார். இவர், பூமியில் வாழும் கடவுளின் பிரதிநிதியாக (தூதராக) கருதப்படும் புனித நபராக திகழ்ந்து வருகின்றார். இதுமட்டுமின்றி, வத்திகான் நகர அரசின் இறையாண்மையுமாக இவரே விளங்கி வருகின்றார்.

எனவேதான் உலக தலைவர்களுக்கு இணையான பாதுகாப்பை வத்திகான் அரசு போப் பிரான்சிஸிற்கு வழங்கி வருகின்றது. இதனடிப்படையிலேயே அவரின் பொது காட்சியளிப்பிற்காக அதிக பாதுகாப்பு மற்றும் சிறப்பு திறன் கொண்ட கார் புதிதாக களமிறக்கப்பட்டிருக்கின்றது.

இது ஓர் பூஜ்ஜிய உமிழ்வு திறன் கொண்ட காராகும். அப்படி என்றால், இக்கார் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைக்கக் கூடிய எந்தவொரு வாயுவையும் வெளிப்படுத்தாது என்பதே பொருள் ஆகும். இது ஓர் ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கக்கூடிய மின்சாரக் காராகும். போப் பிரான்சிஸ் தேர்வு செய்ததன் அடிப்படையில் இக்கார் களமிறக்கப்பட்டிருக்கின்றது.

இதனை ஜப்பானிய நாட்டின் கத்தோலிக்க பேராயர்கள் குழு வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொயோட்டா நிறுவனத்தின் மிராய் மாடல் காரே தற்போது பேராயர்களால் போப்பாண்டவரின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், போப்பாண்டவரின் பயன்பாட்டிற்கு ஏற்ப சில மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, காரின் பின் பகுதி முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. போப்பாண்டவரை வெட்டவெளியில் காட்சிப்படுத்தும் வகையில் அந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. அதேசமயம், முன்பக்கத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. அதாவது, ஓட்டுநர் மற்றும் ஓட்டுநரின் சக பயணி இருக்கை பகுதிக்கு எந்தவொரு மாற்றமும் வழங்கப்படவில்லை.

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இந்த மாற்றத்தால் டொயோட்டா மிராய் நவீன ரக தேராக மாறியிருக்கின்றது. இதில் போப்பாண்டவர் அமர்ந்து அல்லது நின்று செல்லும் வகையில் இருக்கை மற்றும் நிற்கும் மேடை வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. இதில், இருக்கைக்கு போண்டவரைக் குறிக்கும் சின்னம் பொறிக்கப்பட்ட லெதர் போர்வை போர்த்தப்பட்டுள்ளது.

இந்த இருக்கை அதிக சொகுசு வசதியைக் கொண்டதாகும். இந்த இருக்கைக்குப் பின்னால் மேலும் இருவர் அமர்ந்து செல்லும் வகையில் இரு இருக்கைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. போப்பாண்டவரின் உதவியாளர்கள் அல்லது பாதுகாவலர்கள் பயணிக்கும் வகையில் அந்த இடம் வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, பாதுகாப்பிற்காக புல்லட் ப்ரூஃப் கண்ணாடி மற்றும் பார்வையாளர்களுக்கு போப்பாண்டவர் சிறப்பாக தென்படும் வகையில் மின் விளக்கு உள்ளிட்டவை பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த புதிய மாற்றங்களினாலயே டொயோட்டா மிராய் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் நவீன ரக தேராக மாறியிருக்கின்றது.

இந்த மாற்றத்தின் காரணமாக டொயோட்டா மிராய் காரின் அளவிலும் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. நீளம் 5.1 மீட்டராகவும், உயரம் 1.2 மீட்டராகவும், கிரவுண்ட் கிளியரன்ஸ் 2.7 மீட்டராகவும் உயர்ந்துள்ளது. இந்த காரைப் பயன்படுத்துவதன் மூலம் உலகிலேயே காலநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் முதல் மத குருவாக போப் பிரான்சிஸ் மாறியிருக்கின்றார்.

முன்னதாக போப் பிரான்சிஸ் டொயோட்டா லேண்ட் க்ரூஸர், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகன் மற்றும் ரேஞ்ஜ் ரோவர் உள்ளிட்ட கார்களைப் பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே அதிக பாதுகாப்பு மற்றும் சூப்பர் திறன் கொண்ட டொயோட்டா மிராய் காருக்கு அவர் மாறியிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








