பேஸ்புக் லைவால் கிடைத்த பரிசு... விதிமீறிய இளைஞருக்கு வேற லெவல் பாடம் புகட்டிய போலீஸார்!
ஊரடங்கு அமலில் இருக்கும் சொகுசு காரில் ஜாலியாக வலம் வந்த இளைஞருக்கு விநோதமான தண்டனையை வழங்கியுள்ளனர் போலீஸார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஒரு மாதத்தையும் கடந்து ஊரடங்கு உத்தரவு நீடித்த வண்ணம் இருக்கின்றது. தற்போது, 2.0 வெர்ஷனில் அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு உத்தரவு, எப்போது வேண்டுமானாலும் நீட்டிக்கப்படலாம் என்ற இக்கட்டான நிலையே காணப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.

எனவே, அடுத்தடுத்த வெர்ஷனலில் ஊரடங்கு நீடிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கின்றனர். இதற்கு அண்மைக் காலங்களாக மிக தீவரமாக பரவி வரும் கொரோனா வைரசே முக்கிய காரணமாக இருக்கின்றது.
இந்த அதி வேக பரவலைத் தவிர்ப்பதற்காகவே நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இதனை சீர்குலைக்கும் விதமாக ஒரு சிலர் உலா வந்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களால் அரசின் நோக்கம் சிதைவதுடன், வைரஸ் பரவும் சூழலும் அதிகரிக்கின்றது.

ஆகையால், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றி திரிபவர்களைப் போலீஸார் இரும்புக் கரம் கொண்டு அடக்கி வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் ஊரடங்கு விதியை மீறும் வகையில் வெளியே சுற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, அதனை பேஸ்புக் லைவும் செய்துள்ளார்.

இளைஞரின் இந்த செயல் மற்றவர்களையும் விதிமீறலில் ஈடுபட தூண்டும் வகையில் இருப்பதாக எண்ணிய போலீஸார், அவருக்கு அதே பேஸ்புக்கின் வாயிலாக விநோத தண்டனையை வழங்க திட்டமிட்டனர்.

இந்த சம்பவம் கடந்த ஞாயிறன்று நடைபெற்றதாக கூறப்படுகின்றது. அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்தே இத்தகைய நடவடிக்கையை சத்தீஸ்கர் போலீஸார் மேற்கொண்டிருக்கின்றனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் விதிமீறலில் ஈடுபட்ட இளைஞர் ராய்பூரைச் சேர்ந்த அபினய் சோனி என்பது தெரியவந்தது. இவர்தான் சொகுசு காரான பிஎம்டபிள்யூ-வில் லாக்டவுணை மீறும் விதமாக சுற்றி திரிந்தவர்.
இவர், ஜாய் ரைடை செய்தது மட்டுமின்றி அவரது நண்பர்களுக்கும் தெரியப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக் மூலமாக லைவ் செய்துள்ளார்.

இந்த சம்பவம் ஐஸ் பக்கெட் சேலஞ்சைபோல் எக்காரணத்தைக் கொண்டும் வைரலாகி விடக்கூடாது என்று எண்ணிய போலீஸார், அதே பேஸ்புக் வாயிலாக விநோத தண்டனை வழங்க திட்டமிட்டனர். அதன்படி, இளைஞரைத் தேடிபிடித்த போலிஸார், தான் கைது செய்யப்பட்டதை, அவரின் முகப்புத்தக பக்கம் வாயிலாகவே மீண்டும் லைவ் செய்ய உத்தரவிட்டனர்.

அதன்படி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அபினய் சோனி, "நேற்று இரவு, நான் லாக்டவுணை (ஊரடங்கு உத்தரவை) உடைத்து வெளியேச் சென்றேன். அதை பேஸ்புக் லைவ்வும் செய்தேன். இப்போது ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நான் காவல்துறை முன் சரணடைந்து, கைது செய்யப்பட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

இளைஞர் அபினய் சோனி-க்கு ஏற்பட்ட இந்த நிலை விதிமீறுவோர்களின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது. இந்த சம்பம் குறித்து ராய்ப்பூர் போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி) ஆரிஃப் ஷேக்கும் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
அதில், "நேற்று (ஞாயிறு) இரவு, ஒரு இளைஞர் ஊரடங்கு உத்தரவை மீறியதுடன், பேஸ்புக்கில் தனது செயலை நேரடியாக ஒளிபரப்பினார். இதன் விளைவாக, அவர் கைது செய்யப்பட்டார். இம்மாதரியான விதிமீறலில் மற்றவர்கள் ஈடுபடக்கூடாது என்பதற்காக இதனை நேரடியாக ஒளிபரப்ப வேண்டியிருந்தது. ஊரடங்கு உத்தரவில், அனைவரும் விதிகளை பொறுப்புடன் பின்பற்ற வேண்டும், இல்லையென்றால் நாங்கள் உங்களுக்காகவே வித்தியாசமான நடவடிக்கைகளுடன் காத்திருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








