ரிசர்வ் வங்கி அறிவிப்பு... கார் கடன் குறித்த இரண்டு முக்கிய நன்மைகள்!
கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்னையை மனதில் வைத்து, ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்புகளால், கார் கடன் வாங்கியோர் மற்றும் புதிதாக விண்ணப்பிப்போர் நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா பிரச்னையால் ஆட்டோமொபைல் துறை பெரிய அடியை சந்தித்துள்ளது. மேலும், வர்த்தக செயல்பாடுகள் முடங்கி இருப்பதால், எங்கு பார்த்தாலும் வேலை இழப்பு, சம்பள குறைப்பு பிரச்னைகள் தலை தூக்கி வருகின்றன. இந்த சூழலில், ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதில், கார் கடன் குறித்த இரண்டு முக்கிய விஷயங்களும் வெளியாகி இருக்கின்றன. அதாவது, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 0.4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

இதன் எதிரொலியாக வங்கிகள் கார் உள்ளிட்ட வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தை விரைவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலமாக, புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வாய்ப்புள்ளது.

மறுபுறத்தில், ஏற்கனவே கார் கடன் வாங்கி செலுத்தி வருபவர்கள் மாதத் தவணையை காலம் தாழ்த்தி கட்டிக் கொள்வதற்கான மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த சலுகையானது இந்த மாதம் 31ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனை வரும் ஆகஸ்ட் மாதம் வரை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன்மூலமாக, வேலை இழப்பு, சம்பள குறைப்பு உள்ளிட்ட விஷயங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மேலும் மூன்று மாதங்கள் வரை கார் கடனுக்கான மாதத் தவணையை கட்டாமல், பின்னர் செலுத்தும் வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.

அதேநேரத்தில், மாதத் தவணை செலுத்துவதில் இருந்து மூன்று மாதங்களுக்கு சலுகை அளிக்கப்பட்டாலும், இதுபோன்று காலதாமதமாக செலுத்தப்படும் மாதத் தவணைகளுக்கு கூடுதல் வட்டி வசூலிக்கப்படும். எனவே, கடனை திருப்பிச் செலுத்துவதற்கு பிரச்னை இல்லாதவர்கள் இந்த சலுகையை பெறாமல் தவிர்ப்பது நல்லது.

உண்மையிலேயே பண நெருக்கடியில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சலுகையை பெற்றுக் கொள்வதே சிறந்ததாக இருக்கும். இல்லையெனில், அதிக வட்டி மற்றும் மாதத் தவணை காலம் முடிவடைதில் ஏற்படும் நீட்சி ஆகியவை தேவையில்லாத மன உளைச்சல்களை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications








