இந்த நேரத்திலும் சம்பள உயர்வு... பிரபல நிறுவனம் அசத்தல்... காரணம் தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க
கொரோனா பிரச்னைக்கு மத்தியிலும், பிரபல கார் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19), மனித உயிர்களை கொத்து கொத்தாக பறித்து வருகிறது. அத்துடன் பொருளாதார ரீதியிலும் மிகவும் கடுமையான பாதிப்புகளை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸின் கோர தாண்டவத்தால், ஆட்டோமொபைல் துறை பலத்த அடியை வாங்கியுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, ஆட்டோமொபைல் துறை சார்ந்த தொழில்கள் முடங்கின. வாகன உற்பத்தி மற்றும் விற்பனை என அனைத்தும் முடங்கியதால், ஆட்டோமொபைல் துறை தற்போது நலிவடைந்துள்ளது. எனவே முன்னணி நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

அத்துடன் ஒரு சில நிறுவனங்களில் ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில், உங்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட மகிழ்ச்சியை ரெனால்ட் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. ஆம், ரெனால்ட் கார் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு தற்போது சம்பள உயர்வை அறிவித்துள்ளது.

ரெனால்ட் நிறுவனம் 250 ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை சம்பள உயர்வை அறிவித்துள்ளது. கொரோனா பிரச்னையால் பண புழக்கம் முடங்கியுள்ள நிலையில் வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர 30க்கும் மேற்பட்ட எக்ஸிக்யூட்டிவ்களுக்கு பதவி உயர்வையும் ரெனால்ட் அறிவித்துள்ளது.

இது நடப்பு நிதியாண்டிற்கான சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகள் ஆகும். வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், மற்றொரு ஆச்சரியமும் உள்ளது. அதாவது கடந்த 2019-20ம் நிதியாண்டில் வழங்கப்பட்டதை விட, நடப்பு 2020-21ம் நிதியாண்டில் ரெனால்ட் நிறுவனம் சம்பள உயர்வை அதிகமாக வழங்கியுள்ளது.

கடந்த நிதியாண்டில் 10 முதல் 12 சதவீதம் வரை மட்டுமே சம்பள உயர்வு வழங்கப்பட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ரெனாலட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் வலுவாக காலூன்ற திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏற்ப பல்வேறு புதிய தயாரிப்புகளை அந்நிறுவனம் தொடர்ச்சியாக களமிறக்கி வருகிறது. குறிப்பாக ரெனால்ட் நிறுவனத்தின் ட்ரைபர் இங்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக வரும் பண்டிகை காலத்தில், புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே ஊழியர்களுக்கு உத்வேகம் குறைய கூடாது என ரெனால்ட் நிறுவனம் கருதுகிறது. உத்வேகத்தை தக்க வைப்பதற்காக அதிரடியாக சம்பள உயர்வை ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரெனால்ட் நிறுவனம் தற்போது மலிவான விலை கொண்ட கார்களை உள்ளடக்கிய வலுவான லைன்-அப்பை கைவசம் வைத்துள்ளது. இதுதவிர அடுத்த சில ஆண்டுகளில், 8 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில், 4 புதிய கார்களை ரெனால்ட் களமிறக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தலா ஒரு ஹேட்ச்பேக், செடான், எம்பிவி மற்றும் எஸ்யூவி ரக கார்கள் அடக்கம்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பஸ், ஆட்டோ மற்றும் டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து முறைகளை மக்கள் தவிர்க்க தொடங்கியுள்ளனர். அதற்கு பதிலாக சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை பாதுகாப்பானதாக கருதுகின்றனர். எனவே வரும் காலங்களில் கார் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை உயரலாம் என கருதப்படுகிறது.

ஆனால் பண புழக்கம் அடி வாங்கியுள்ளதால், விலை குறைவான கார் மாடல்கள்தான் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக இருக்கும். எனவே ரெனால்ட் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள விலை குறைவான கார்கள், வாடிக்கையாளர்களை அதிகம் கவர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரெனால்ட் தவிர மற்ற நிறுவனங்களும், புதிய கார்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக உள்ளன.


Click it and Unblock the Notifications








