பல புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களுடன் அதகளப்படுத்தப்போகும் ரிவோல்ட்!
பல புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ரிவோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான வரவேற்பு வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால், பல புதிய நிறுவனங்கள் சிறந்த தயாரிப்புகளை களமிறக்குவதில் முனைப்பு காட்டி வருகின்றன. ஆனால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மின்சார பைக்குகளுக்கான முக்கியத்துவம் குறைவாக இருக்கிறது.

விலை மற்றும் வடிவமைப்பு சிக்கல்களால் எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்துவதில் வாகன நிறுவனங்கள் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், ரிவோல்ட் நிறுவனம் எலெக்ட்ரிக் பைக் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு அந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், வர்த்தகத்தை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மும்பையில் புதிய ஷோரூமை திறந்துள்ள அந்நிறுவனம் அடுத்த ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து பெரு நகரங்களிலும் விற்பனையை துவங்கிவிடுவதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், எலெக்ட்ரிக் பைக் மார்க்கெட்டில் சந்தையை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வுகளை வழங்கும் விதத்தில், பல புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டியளித்துள்ள ரிவோல்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் ராகுல் ஷர்மா,"அடுத்த ஆண்டு நாடு முழுவதும் வர்த்தகத்தை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், பல புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களையும் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளோம்," என்று கூறி இருக்கிறார்.

மேலும், பைக்குகளில் பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வசதியானது மிக முக்கியமானதாக கருதுகிறோம். இது எலெக்ட்ரிக் பைக் உரிமையாளர்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். எங்களது வாடிக்கையாளர்களில் 33 சதவீதம் பேர் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை மாற்றித் தரும் வசதியை வழக்கமாக பயன்படுத்துகின்றனர்," என்றும் அவர் கூறி இருக்கிறார்.

எலெக்ட்ரிக் பைக் மார்க்கெட்டில் ரிவோல்ட் நிறுவனம் மட்டுமே தற்போது வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும், தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்த இருப்பதாக தெரிவித்திருப்பதன் மூலமாக, அந்நிறுவனம் மிக வலுவான சந்தையை பெறும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








