வீணாகும் பல மில்லியன் டன் அரிசி உமி! காரின் பாகமாக மாற்ற பிரபல நிறுவனம் திட்டம்... அசத்தலான திட்டம்!
காரின் குறிப்பிட்ட சில பாகங்களைத் தயாரிக்க பிளாஸ்டிக்கிற்கு பதிலாக அரிசியின் உமியைப் பயன்படுத்த இருப்பதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

ஸ்பானிஷ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கார் உற்பத்தி நிறுவனங்களில் சீட் (Seat) நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனமே அரிசியின் கழிவாக கருதப்படும் உமியைக் கொண்டு கார்களுக்கான பிரத்யேக பாகங்களைத் தயாரிக்க இருப்பதாக கூறியுள்ளது. பொதுவாக, காரின் பாகங்களை உருவாக்க பிளாஸ்டிக்குகளே பயன்படுத்தப்படுகின்றது.

ஆனால், பிளாஸ்டிக்குகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, பிளாஸ்டிக்குகள் மட்காத மூலக் கூறுகளால் ஆனவை. இதனை மறு சுழற்சி செய்ய முடியும் என்றாலும், அவ்வாறு செய்யப்படும்போதும் இவற்றின் பல்வேறு தீங்குமிக்க வாயுக்கள் வெளியேறுகின்றன. எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுமாறு உலக நாடுகள் பல தங்களின் மக்களை அறிவுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஸ்பானிஷ் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனம் உலக நாடுகளில் உள்ள அனைத்து வாகன உற்பத்தி நிறுவனத்திற்கும் முன்னோடியாக பிளாஸ்டிக்கை தனது தயாரிப்புகளில் தவிர்க்க இருக்கின்றது. இதற்கு மாறாக அரிசி உமியைப் பயன்படுத்தி பாகங்களைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கின்றது.

முதலில் தனது கான்செப்ட் (முன் மாதிரி) மாடல்களின் பாகங்களுக்காக இதனை பயன்படுத்த சீட் திட்டமிட்டுள்ளது. உலகளவில் ஆண்டு ஒன்றிற்கு 700 மில்லியன் டன்கள் அரிசி அறுவடைச் செய்யப்படுகின்றது. இதில், 20 சதவீதம் அல்லது 140 மில்லியன் டன்கள் கழிவாக வெளியேற்றப்படுகின்றன.

அதாவது, 140 மில்லியன் டன்கள் வரை அரிசி உமிழ்கள் பயனற்றதாக ஒதுக்கப்படுகின்றது. இதனை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே சீட் நிறுவனம் இதனைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதனை பாலியூரிதீன் அல்லது பாலிப்ரொப்பிலீன் போன்ற பிற கூறுகளுடன் கலந்து பயன்படுத்தலாம் என தெரிகின்றது.

இந்த மூலப் பொருளே விரைவில் சீட் நிறுவனத்தின் புதிய வாகனங்களை அலங்கரிக்க இருக்கின்றது. காரின் அடித்தளம் அல்லது பக்கவாட்டு பேனல்கள் அல்லது அலங்காரப் பேனல்களாக இதனை சீட் பயன்படுத்தலாம். இதன் மூலம் சீட் நிறுவனம் தற்போது பயன்படுத்தி வரும் அதிகப்படியான கார்பன் மூலப்பொருள் பயன்பாட்டைக் குறைக்க முடியும். மேலும், செலவையும் கணிசமாகக் குறைக்க முடியும்.

இத்துடன், கார்பன் மூலப்பொருளால் ஏற்படும் அதிக எடையையும் புதிய அரிசி உமியால் தயாரிக்கப்படும் பாகத்தைக் கொண்டு குறைக்க முடியும். எனவே, சீட் நிறுவனத்தின் எதிர்கால வாகனங்கள் தனித்துவமானதாகவும், எடைக்குறைவானதாகவும் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு, எடைக்குறைப்பு செய்வதன் மூலம் இதன் அதிக எரிபொருள் பயன்பாட்டையும் குறைக்க முடியும்.
ஆகையால், அரிசி உமி எனும் ஒரே கல்லின் மூலம் பல விதமான பயன்களை சீட் நிறுவனம் பெற இருக்கின்றது. இதுகுறித்த தகவலை சீட் நிறுவனம் மிக சமீபத்திலேயே வெளியிட்டது. இந்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு இதுகுறித்த ஆய்வினை சீட் நிறுவனம் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றது. 2050ம் ஆண்டிற்குள் கார்பன் பயன்பாடு இல்லா வாகனங்களைத் தயாரிக்கவும் அது திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








