ஹேட்ச்பேக்கா? எஸ்யூவியா? வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் கார் செக்மெண்ட் எதுன்னு தெரியுமா?
விற்பனை எண்ணிக்கை அடிப்படையில், கடந்த அக்டோபர் மாதத்தின், டாப்-5 கார் செக்மெண்ட்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு சிறப்பான மாதங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால் ஆட்டோமொபைல் துறை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த அக்டோபரில் கார்களின் விற்பனை சிறப்பாக இருந்துள்ளது. கார் விற்பனையில் பெரும்பாலான செக்மெண்ட்கள் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

கடந்த அக்டோபர் மாதம், விற்பனை எண்ணிக்கை அடிப்படையில், டாப்-5 செக்மெண்ட்கள் குறித்த தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம். விற்பனை எண்ணிக்கை அடிப்படையில், மிகப்பெரிய செக்மெண்ட்டாக இருப்பது காம்பேக்ட் ஹேட்ச்பேக் செக்மெண்ட்தான். மாருதி சுஸுகி ஸ்விப்ட், வேகன் ஆர், டாடா டியாகோ, ஹூண்டாய் ஐ10, ஹூண்டாய் சாண்ட்ரோ ஆகியவை இந்த செக்மெண்ட்டில் வருகின்றன.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்த செக்மெண்ட்டில் ஒட்டுமொத்தமாக 79,350 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த செக்மெண்ட்டில் கார்களின் விற்பனை தற்போது சுமார் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த செக்மெண்ட்டில் 62,427 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

காம்பேக்ட் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டை விட காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் மிக பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு அக்டோபரில் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் சுமார் 60 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் வேகமாக வளர்ந்து வரும் செக்மெண்ட் ஆகவும் இது உருவெடுத்துள்ளது.

காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 33,225 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் 53,113 ஆக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட கார்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

அதேபோல் ஹூண்டாய் ஐ20, மாருதி சுஸுகி பலேனோ, ஹோண்டா ஜாஸ், டொயோட்டா க்ளான்சா மற்றும் டாடா அல்ட்ராஸ் உள்ளிட்ட கார்களை உள்ளடக்கிய பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 18 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில், 36,612 பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன.

ஆனால் நடப்பாண்டு அக்டோபரில், 43,137 பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் சுமார் 60 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட் சுமார் 11 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்கள் இந்த செக்மெண்ட்டில் வருகின்றன.

மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் நடப்பாண்டு அக்டோபரில் 38,162 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 34,506 ஆக மட்டுமே இருந்தது. அதே சமயம் கொரோனா அச்சத்தால் மக்கள் பொது போக்குவரத்தை தவிர்ப்பதால், விலை குறைவான எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் கார்களின் விற்பனை உயரும் என கணிக்கப்பட்டது.

ஆட்டோமொபைல் வல்லுனர்கள் பலரும் அப்படிதான் ஆருடம் கூறினர். ஆனால் விற்பனை எண்ணிக்கை அவ்வாறு இல்லை. எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 34,743 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 34,630 ஆக இருந்தது. இது வெறும் 0.33 சதவீத வளர்ச்சிதான்.

இந்த செக்மெண்ட்டின் கீழ் வரும் மாருதி சுஸுகி ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ, ரெனால்ட் க்விட் ஆகிய கார்கள் விற்பனையில் ஏற்றத்தாழ்வின்றி கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன. இந்த செக்மெண்ட்டில் கார்களின் விலை குறைவு என்பதால், சமூக இடைவெளியை கடைபிடிக்க அதிகம் பேர் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விற்பனையில் பெரிய வளர்ச்சியை காண முடியவில்லை.


Click it and Unblock the Notifications








