சியாம் அமைப்பின் புதிய தலைவராக கெனிச்சி அயுகவா தேர்வு
இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பின் (SIAM) புதிய தலைவராக கெனிச்சி அயுகவா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

இதுவரை சியாம் அமைப்பின் தலைவராக மஹிந்திரா நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ராஜன் வதேரா செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், அவரது பதவி காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன.

இதில், மாருதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வரும் கெனிச்சி அயுகவா சியாம் அமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு முதல் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் கெனிச்சி அயுகவா சியாம் அமைப்பின் துணைத் தலைவராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், தற்போது அவர் புதிய தலைவராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

அதேபோன்று, சியாம் அமைப்பின் புதிய துணைத் தலைவராக அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான விபின் சோதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வால்வோ ஐஷர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான வினோத் அகர்வால் தொடர்ந்து சியாம் அமைப்பின் பொருளாளராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் வாகன உற்பத்தியாளர் மற்றும் வாகன எஞ்சின் உற்பத்தியாளர்களுக்கான ஒருங்கிணைந்த லாப நோக்கம் இல்லாத கூட்டு அமைப்பாக சியாம் செயல்பட்டு வருகிறது.

வாகன உற்பத்தியாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை பின்பற்றுவது, முதலீடுகளை குறைப்பதற்கான வழிமுறைகளுக்கான ஆலோசனைகளை வழங்குவது, வாகனங்களின் விலையை குறைப்பதற்கான வழிகள் மற்றும் இந்தியாவில் வாகன உற்பத்தியை உலகத் தரத்திற்கு மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சியாம் அமைப்பு மேற்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








